சட்டப்பேரவை துணை சபாநாயகராகிறார் பொள்ளாச்சி ஜெயராமன்

சட்டசபை துணை சபாநாயகராக இருந்த ப.தனபால் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்று பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து துணை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுவோர் தங்கள் வேட்பு மனுவை சட்டசபை செயலாளரிடம் கொடுக்கலாம் என்றும் சபாநாயகர் தனபால் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்கிடையே அதிமுக சார்பில் துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமன் போட்டியிடுவார் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் இன்று காலை தனது வேட்பு மனுவை சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம் தாக்கல் செய்தார். அவரது மனுவை அமைச்சர் கே.பி. முனுசாமி முன்மொழிய அமைச்சர் வைத்திலிங்கம் வழிமொழிந்தார்.
வேட்பு மனு தாக்கலின் அனைத்து அமைச்சர்களும் உடன் இருந்தனர்.
துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் பொள்ளாச்சி ஜெயராமன் உடுமலைப்பேட்டை தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியைச் சேர்ந்த வரதராஜ், சரஸ்வதி அம்மாள் ஆகியோருக்குக் கடந்த 7-6-1953-ல் பிறந்தவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன். இவருடன் பிறந்தவர்கள் ஒரு அக்காள் மற்றும் 2 தங்கைகள். மனைவியர் பாக்கியலட்சுமி, ஜோதி லட்சுமி. 2 மகன்களும் 4 மகள்களும் உள்ளனர்.
1986ம் ஆண்டு முதல் 1989 வரை ஒருங்கிணைந்த கோவை மாவட்டச் செயலராகவும் இருந்தவர் ஜெயராமன். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜெ. அணி மற்றும் ஜா. அணியாக அதிமுக பிரிந்தபோது ஜெயலலிதாவை ஆதரித்தார் ஜெயராமன். 1989-ல் மேட்டுப்பாளையத்தில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டும், 1996-ல் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டும் தோல்வியடைந்தார்.
1995-ல் கோவை புறநகர் மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டார். 1995-96 ஜவுளி வாரியத் தலைவரானார். கடந்த 2001-ல் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட ஜெயராமன் வெற்றி பெற்றதும் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின் மிகக் குறைந்த நாள்களில் அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
2004-ம் ஆண்டில் மீண்டும் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு 2006-ம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்தார். 2006-ல் மீண்டும் பொள்ளாச்சி தொகுதியில் வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் உடுமலைப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.












Click it and Unblock the Notifications