மாணவியின் சாவில் மர்மம்: கல்லூரி முன் போராட்டம்-49 மாணவர்கள் கைது
நாமக்கல்: நாமக்கலில் கல்லூரி மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவும் கோரி சட்ட கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 49 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ளது விவேகானந்தா கல்வி நிறுவனம். இங்கு படித்து வந்த காய்த்ரி என்ற மாணவி, கடந்த மாதம் உயிரிழந்தார். மாணவி தற்கொலை செய்து கொண்டதாக, கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இறந்த மாணவியின் பெற்றோரும், ஆதிதமிழர் பேரவை போன்ற சில அமைப்பினரும் சேர்ந்து கொண்டு, காய்த்ரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டி, போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் மாணவியின் சாவு குறித்த மர்மம் நீடிப்பதால், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சட்ட கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் கல்லூரி முன் முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரையும் மீறி சென்று கல்லூரிக்கு பூட்டு போட்டு போராட்ட நடத்த முயன்ற 49 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிப்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications