மனைவியுடனான கள்ளத்தொடர்பை கண்டித்த டெய்லரை 'டூர்' கூட்டிச் சென்று தீர்த்து கட்டிய வாலிபர்
திருப்பூர்: மனைவியுடனான கள்ளத்தொடர்பை கண்டித்த திருப்பூர் டெய்லரை, ஒகேனக்கலுக்கு சுற்றுலா அழைத்து சென்று கொடூரமான முறையில் கொலை செய்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரை சேர்ந்தவர் தண்டபாணி(38). பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தீபா. வேலூர் மாவட்டம் அப்துல்நகரை சேர்ந்தவர் காளிதாஸ். இவரும், தண்டபாணி வேலை செய்த அதே கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் தண்டபாணியுடன் ஏற்பட்ட பழக்கத்தில் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்ற காளிதாஸூக்கு, தண்டபாணியின் மனைவி தீபாவுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் பழக்கம் அதிகரித்து, கள்ள தொடர்பாக மாறியது. தண்டபாணி வீட்டில் இல்லாத போது, இருவரும் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதை அறிந்த தண்டபாணி, தனது மனைவி தீபாவையும், காளிதாஸையும் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த காளிதாஸ், தண்டபாணியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இந்த நிலையில் நண்பர்களுடன் ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்ற தண்டபாணி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ஒகேனக்கல் தொங்கு பாலம் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கழுத்து, மற்றும் மார்பில் கத்தி குத்து காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரித்து வந்தனர்.
அப்போது கொடூரமான முறையி்ல் கொலை செய்யப்பட்டு கிடந்தது திருப்பூரை சேர்ந்த தண்டபாணி தான் என்பது தெரியவந்தது. மேலும் அவருடன் சுற்றுலா சென்றவர்களில் காளிதாஸூம் ஒருவர் என்பதால், அவர் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதனால் காளிதாஸை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் காளிதாஸ் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா அழைத்து சென்று தண்டபானியை தீர்த்து கட்டியதை ஒப்பு கொண்டார்.
இது குறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
தீபாவுடனான கள்ள தொடர்பை அறிந்த தண்டபாணி அதை கண்டித்தார். மேலும் அவருடன் பேச கூடாது என்று கூறினார். ஆனால் தீபாவை மறக்க முடியாத நான், அவரை அடைய நினைத்தேன். அதற்கு தண்டபாணி தடையாக நின்றதால், அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தேன்.
இதற்காக ஒகேனக்கலுக்கு சுற்றுலா சென்ற போது, நண்பர்களுடன் தண்டபாணியும் அழைத்து சென்றேன். அங்கு அனைவருக்கும் மது வாங்கி கொடுத்தேன். அனைவரும் போதையில் தள்ளியாடிய போது, தண்டபாணியை தனியாக அழைத்து சென்று, மறைத்து வைத்திருந்த கத்தியால், அவரை சரமாரியாக குத்தினேன். இதில் நிலைக்குலைந்த தண்டபாணி அங்கேயே இறந்தார்.
அதன்பிறகு நண்பர்களுடன் காரில் ஏறி திருப்பூருக்கு வந்துவிட்டேன். வழக்கம் போல வேலைக்கு சென்று வந்தேன். தீபாவுடன் தினமும் சந்தோஷமாக இருந்தேன். ஆனால் போலீஸ் விசாரணையில் நான் சிக்கி கொண்டேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து கொலை செய்த காளிதாஸ் மற்றும் அதற்கு உதவிய லோகேஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications