ஆசிரியர் தகுதி தேர்வு குறுக்கீடு- வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் தேதி மாற்றம்!
சென்னை: வரும் 14ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற உள்ளதால், அன்று நடைபெற இருந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறாது. அதற்கு பதிலாக வரும் 28ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் வரும் 2013ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை செய்ய மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்வதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக கடந்த 7ம் தேதி, வரும் 14 மற்றும் 21ம் தேதி ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 7ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த நிலையில் அடுத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ள வரும் 14ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. இதனால் அன்று நடைபெற உள்ள சிறப்பு முகாம் வரும் 28ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட திருத்தங்களை செய்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications