மாணவியை சுட்டவர் குறித்து துப்பு கொடுப்பவருக்கு ரூ.1 கோடி பரிசு: பாகிஸ்தான் அறிவிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பள்ளி மாணவியை சுட்ட தலிபான் தீவிரவாதி குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியான மலாலா யூசுப்சாய்(வயது 14), தீவிரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பி வந்தார். இதன் காரணமாக அமைதிக்கான தேசிய விருதை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி பேருந்தில் வந்து கொண்டிருந்த மாணவி மலாலாவை, தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கியால் சுட்டான். இதில் சிறுமியின் தலையில் ஒரு குண்டும், முதுகெலும்பு அருகிலும் ஒரு குண்டும் பாய்ந்தது.
படுகாயமடைந்த அவர், பெஷாவரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தலையில் வீக்கத்தை குறைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். மாணவிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், மலாலா மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ சிகிச்சைக்காக மலாலாவை எந்நேரமும் துபாய்க்கு கொண்டு செல்ல மருத்துவமனையில் விமான ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது .
தாலிபான் இயக்கம் ஒப்புதல்
முன்னதாக தெஹ்ரிக்- இ- தலிபான் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் இக்ஷானுல்லா இக்ஸன் கூறுகையில், மாணவி மீது தாக்குதல் நடத்தியது நாங்கள்தான்.
தலிபான்களுக்கு எதிராக மலாலா தொடர்ந்து பேசி வந்தார். அதனால்தான் தாக்குதல் நடத்தினோம். அவர் உயிர் பிழைத்தாலும் மீண்டும் தாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு கோடி பரிசு
இந்த நிலையில் மலாலாவை சுட்டவன் குறித்து தகவல் தரும் நபர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பெஷாவரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அந்நாட்டு அமைச்சர் இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications