ஊழல் விவகாரங்களில் அரசைக் காப்பாற்றும் விசாரணை அமைப்புகள்: அருண் ஜேட்லி

இது தொடர்பாக நிதி சென்ட்ரல் இணையதளத்தில் அருண் ஜேட்லி எழுதிய கட்டுரையின் முக்கிய அம்சங்கள்:
டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், ஊழல் விவகாரங்கள் குறித்தும் எதிர்மறையான சிந்தனைகள் குறித்தும் பேசியிருக்கிறார். பொதுவாழ்விலும் அரசிலும் ஊழல் என்பது வழிந்தோடிக்கொண்டிருக்கிறது. இது சகிக்க முடியாத அளவுக்கு வரம்பை மீறிச் சென்றுவிட்டது. ஊழலுக்கு எதிராக பல்வேறு அமைப்புகளை நாம் நிறுவியிருக்கிறோம். ஆனால் அவைகளால் எந்தப் பயனும் இல்லை. பழைய சட்டங்களை மாற்றிவிட்டு புதிய சட்டங்களை உருவாக்க வேண்டியதன் தேவையையே இது வெளிப்படுத்துகிறது. இதுதான் அன்றும் இன்றும் நாம் எதிர்கொண்டிருக்கும் உண்மை.
போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் நடந்து என்ன? சுவிஸ் அதிகாரிகள், சிபிஐயிடம் சர்ச்சைக்குரிய நிறுவனத்துக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். பிரபல அரசியல் தலைவருடன் இணைத்தும் சுவிஸ் அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் சங்கரானந்த் தலைமையில் ஒரு நாடாளுமன்றக் குழு அமைத்து அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று கூறிவிட்டனர். பொதுவாக சிபிஐயின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்றால் அதிகாரத்தில் உள்ள கட்சியின் சார்பு நிலையையே கடைபிடிக்கிறது. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் போபர்ஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்து அந்த வழக்கையே குழிதோண்டி புதைத்துவிட்டனர்.
இதேபோல் நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு பணம் கொடுக்கப்பட்ட வழக்கிலும் கண்துடைப்புக்காக ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவும் அமெரிக்காவும் அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் அரசுக்கான ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது எம்.பிக்களுக்கு பணம் கொடுத்து அரசாங்கத்தை வெற்றி பெற செய்தனர். பொதுவாழ்வில் உள்ள பிரதமரே இத்தகைய செயலில் ஈடுபடுவதை என்னவென்று சொல்வது?
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலும் அப்படிதான். பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்ட பிறகே நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதன் தற்போதைய போக்கு முரண்பாடாக இருக்கிறது. பொதுவாகவே நாடாளுமன்ற கூட்டுக் குழு என்பது ஊழலில் தொடர்புடையோரை விடுவிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.
நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழலிலும் இப்படித்தான்! அரசியல் ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் செல்வாக்கு மிக்க நபர்கள் முறைகேடான வழிகளில் ஒதுக்கீடு பெற்றிருக்கின்றனர். ஒரு நேர்மையான அரசாங்கம் என்பது இப்படி புகார் வந்தவுடன் அனைத்து ஒதுக்கீடுகளையும் ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. ஸ்பெக்ட்ரம் வழக்கில் உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்து அளித்த தீர்ப்பில் குடியரசுத் தலைவர் மூலமாக விளக்கம் கேட்டு இயற்கை வளங்களை ஏலம் விடுதலில் சாதகமான தீர்ப்பை மத்திய அரசு பெற்றிருக்கிறது. இத்தகைய ஒரு தற்காப்பு நிலையைத்தான் சோனியா காந்தி மருமகன் வத்ரா மீதான தற்போதைய குற்றச்சாட்டு எழுந்தபோதும் காங்கிரஸ் கட்சியினரும் மூத்த அமைச்சர்களும் கையாளுகின்றனர்.
மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி, ஒரு உயர்ந்த அரசு அமைப்பு. ஆனால் அரசாங்கமே இதை சாடுகிறது. நாடாளுமன்ற கூட்டுக் குழு என்பது பொதுவாக உண்மை வெளியாவதைத் தடுத்துவிடுகிறது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு வழக்கில் பொது கணக்குக் குழு இதைத்தான் செய்தது. இதில் சிபிஐயின் விசாரணை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. சிபிஐ என்பது தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஊதுகுழலாகவே செயல்படுகிறது. பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் மீதான வழக்குகளை நிலைமைக்குத் தக்கவாறு சிபிஐ கையாள்கிறது.
இப்படியான சூழலில் பிரதமர் மன்மோகன்சிங் சொல்வதைப் போல் எதிர்மறையான சிந்தனைகள் உருவாகத்தான் செய்யும். ஊழல் வழக்குகள் நேர்மையாக நடத்தப்படவில்லை. அப்படி நடத்தப்பட்டிருந்தால் இத்தகைய எதிர்மறை சிந்தனைகள் உருவாகாது என்பதுதான் நிதர்சனம்.












Click it and Unblock the Notifications