கருப்பு தீபாவளியாக போய்விடுமா?
சிவகாசி: சிவகாசி என்றாலே பட்டாசுதான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு சிறியதும், பெரியதுமாய் பலநூறு பட்டாசு ஆலைகள் நிறைந்துள்ள இந்த நகரம் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. கடந்த மாதம் முதலிப்பட்டியில் நடந்த விபத்து ஒன்று இந்த நகரத்தின் வாழ்வாதாரத்தையே புரட்டிப்போட்டுவிட்டது.

விபத்தும் விபத்து சார்ந்த வாழ்க்கையும்….
சிவகாசி பட்டாசு ஆலைகளில் விபத்து நடைபெறுவது புதிய விசயமில்லை. ஆனால் முதலிப்பட்டியில் நடந்த விபத்தில் 39 பேர் உயிரிழக்கவே இப்போது தினசரி ரெய்டு நடைபெறுகிறது. ரெய்டுக்கு போகும் அதிகாரிகள் காட்டில் பணமழைதானாம்.

வேலை இல்லா திண்டாட்டம்
ரெய்டு மூலம் இதுவரை 70 பட்டாசு ஆலைகள் சீல்வைக்கப்பட்டுள்ளன. 480 பட்டாசு ஆலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 500 கோடி ரூபாய் பட்டாசுகள் முடங்கியுள்ளன. திடீரென பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

கிராமங்களில் என்ன நிலை?
சிவகாசியை சுற்றியுள்ள கிராமங்களில் கருந்திரி தயாரிப்பது வழக்கம். இவர்களுக்கு லட்சக்கணக்கில் வருமானம் கிடைத்து வந்தது. பட்டாசு ஆலைக்கு சென்றுவிட்டு வந்தும் வீடுகளில் வந்தும் திரிசுற்றி பசைபோட்டு சம்பாதித்தவர்கள் அதிகம். ஆனால் கிராமங்களில் வீடு வீடாக ரெய்டு நடைபெறுவதால் அவர்களின் வருமானத்திற்கும் வழியில்லை.

பிழைக்க வழியில்லையே?
ஆலைகளில் குறைந்த அளவு தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கின்றனர். அதுவும் ஷிப்ட் முறையிலேயே வேலை கிடைப்பதால் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பிழைப்பு தேடி வேறு ஊர்களுக்கு பயணிக்கின்றனராம் தொழிலாளர்கள். வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் தினசரி வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது இவர்களுக்கு.

கருப்பு தீபாவளியாக போய்விடுமா?
ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே சிவகாசியில் பட்டாசு வியாபாரம் களைகட்டிவிடும். அமோகமான தயாரிப்பு. கோடிக்கணக்கில் விற்பனை என இதுநாள் வரை பணத்தில் புரண்டு வந்த உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் இந்த வருடம் என்ன செய்வது என்று திகைத்துப் போயுள்ளனர். அதிகாரிகளின் கெடுபிடியால் உற்பத்தி செய்துள்ள பட்டாசுகளை விற்பனைக்கு அனுப்பவும் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் உலகிற்கே ஒளி கொடுத்த சிவகாசி மக்களுக்கு இந்த வருட தீபாவளி கருப்பு தீபாவளிதான் என்பதுதான் சோகம்.











Click it and Unblock the Notifications