நாளை மீண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு- 6.75 லட்சம் பேர் எழுதுகின்றனர்!
சென்னை: தமிழகம் முழுவதும் நாளை ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 6 லட்சத்து 75,393 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வுக்கான வினாத் தாள், விடைத் தாள்கள் அந்தந்த மாவட்டங்களுக்கே கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், போலீஸ் எஸ்.பி., மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் இந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளனர்.
தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரைகள்:
- அனைத்துத் தேர்வர்களும் 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே தேர்வறைக்கு வந்து ஓ.எம்.ஆர். விடைத் தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
- முதல் தாள், இரண்டாம் தாளுக்கான மொழிப் பாடத்தை சரியாக குறிப்பிட வேண்டும். இரண்டாம் தாளில் விருப்பப் பாடத்தையும் சரியாக குறிப்பிட வேண்டும்.
- தேர்வு தொடங்கிய 15 நிமிடங்களுக்குப் பிறகு அதாவது காலையில் 10.15-க்குப் பிறகும், பிற்பகலில் 2.15-க்குப் பிறகும் எந்தவொரு தேர்வரும் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு நடைபெறும்போது தேர்வறையை விட்டு வெளியேற யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- ஓ.எம்.ஆர். விடைத் தாளை பூர்த்தி செய்வதற்காக கருப்பு அல்லது நீல நிற பால் பாயின்ட் பேனாவைக் கொண்டுவர வேண்டும். கால்குலேட்டர், செல்போன் உள்ளிட்ட எந்த எலெக்ட்ரானிக் சாதனங்களும் தேர்வறைக்கு எடுத்துவர அனுமதி இல்லை.
- ஹால் டிக்கெட், ஓ.எம்.ஆர். விடைத் தாள் நகல் ஆகியவற்றை பத்திரமாக வைத்திருந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு உடன் எடுத்துவர வேண்டும்.
- விடைத் தாளை தவறாக நிரப்புவோருக்கு மதிப்பெண் குறைக்கப்படும். ஒரு சில தவறுகளுக்காக அவர்கள் தகுதி நீக்கமும் செய்யப்படுவார்கள்.
ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஜூலை 12-ல் நடைபெற்றது. சுமார் 6.60 லட்சம் பேர் பங்கேற்ற தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால் மீண்டும் இத்தேர்வு நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications