3 பேரைக் கொலை செய்த 17 பேரின் ஆயுள் தண்டனை அதிரடி ரத்து

20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இந்த 17 பேருக்கும் நீண்ட காலம் கழித்து விடுதலை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி உச்சநீதிமன்றம் 17 பேரையும் விடுவிக்க உத்தரவிட்டுள்ளதால் காவல்துறைக்கு இது பெரும் களங்கமாக அமைந்து விட்டது.
நீதிபதிகள் பி.சதாசிவம் மற்றும் ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்தத் தீர்ப்பை அளித்தது. 17 பேருக்கும் சென்னை உயர்நீதிமன்றம்தான் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. அதை உச்சநீதிமன்றம் தற்போது ரத்து செய்து விட்டது.
என்ன நடந்தது?
1991ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி விளாத்திகுளம் கோர்ட்டுக்கு வீரப்பெருமாள், கரும்புலி, மாடசாமி ஆகிய மூவர் கொலை வழக்கு ஒன்றில் ஜாமீன் பெறுவற்காக வந்தனர். மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராவதற்காக வந்த அவர்களை கோர்ட் வளாகத்தில் வைத்து 23 பேர் கொண்ட கும்பல் மடக்கிப் பிடித்தது. பின்னர் அனைவரும் சேர்ந்து மூவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்தனர். பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்ள்.
இந்த வழக்கில் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது செஷன்ஸ் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த செஷன்ஸ் கோர்ட் அனைவரையும் விடுவித்து 1998ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
அதை எதிர்த்து 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அதை விசாரித்த உச்சநீதிமன்றம் தற்போது 17 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications