அதிமுக பிரமுகர் கொலையால் நாகையில் 2 முறை போலீஸ் தடியடி- ஓ.எஸ். மணியனுக்கும் அடி
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் அகரகடம்பனூரைச் சேர்ந்த அதிமுக ஒன்றிய இளைஞர் அணி இணைச் செயலர் சரவணக்குமார் படுகொலை சம்பவத்தில் போலீசார் சனிக்கிழமையன்று 2 முறை தடியடி நடத்தியிருக்கின்றனர். இதில் அதிமுக எம்.பி. ஓ.எஸ். மணியனுக்கும் இதில் அடி விழுந்திருக்கிறது.
மீண்டும் தடியடி
கீழ்வேளூர் கடைத்தெரு பேருந்து நிறுத்தத்தில் நேற்று முன் தினம் நின்று கொண்டிருந்த சரவணக்குமாரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றது.இக்கொலையைக் கண்டித்து சாலை மறியல் நடத்தப்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இக்கொலை சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் கீழ்வேளுர் திமுக செயலர் அட்சயலிங்கம், அவரது தம்பி திருஞானசம்பந்தம் ஆகியோரது வீடுகளை சரவணக்குமார் உறவினர்கள் சூறையாடினர். வீட்டில் இருந்த பொருட்களை தீயிட்டு கொளுத்தினர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தடியடி நடத்தி சரவணக்குமார் உறவினர்களை விரட்டியடித்தனர். இந்த தடியடியில் அதிமுக எம்.பி. ஓ.எஸ். மணியனுக்கும் பலத்த அடி ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் சரவணக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அனைத்து கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று சாலை மறியல்
அதேநேரத்தில் சாவணக் குமாரை கொலை செய்தவர்கள் எவர் மீதும் ஞாயிற்றுக்கிழமை வரை எந்தப் புகாரும் பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த அவரது உறவினர்களும் அதிமுகவினர் நேற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பதற்றமான சுழ்நிலை நிலவுகிறது.












Click it and Unblock the Notifications