வடகிழக்கு பருவமழை 18ம் தேதி துவங்குமாம்: வானிலை ஆய்வு மையம் சொல்கிறது
சென்னை: தென்மேற்கு பருவமழையின் மூலம் தமிழகம் ஏமாற்றம் அடைந்த நிலையில், வரும் 18ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதனால் விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியாமல் திணறி வருகின்றனர். இன்னும் ஒரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை முடிவடையலாம் என்று தெரிகிறது.
இந் நிலையில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக, வடகிழக்கு பருவமழை வரும் 18 அல்லது 19ம் தேதி துவங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது,
தெனமேற்கு பருவமழை ஓரிரு நாட்களில் முடிவடையும் அறிகுறிகள் தென்படுகின்றன. இதனால் வரும் 18 அல்லது 19ம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய துவங்கும். அதன்பிறகு பருவ மழை தீவிரமடைந்து, மாநிலம் முழுவதும் மழை பெய்யும். இந்த மாதம் துவங்க உள்ள வடகிழக்கு பருவ மழை, வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும்.
லட்சத்தீவின் மேல் உள்ள மேகங்களின் மேற்பரப்பில் நீர் திவலைகள் உள்ளன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்னும் 24 மணி நேரத்திற்கு இந்த மழை நீடிக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications