தமிழகம்- புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முடிவை எட்டியுள்ள நிலையில், நாளை அல்லது மறுநாள் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
தற்போது லட்சத்தீவில் உள்ள மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்றைய நிலவரப்படி, தேங்கனிக்கோட்டை, ஓசூர், கெட்டி, சங்ககிரி ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., பெரியகுளம் 5 செ.மீ., சூளகிரி, பாலக்கோடு தலா 4 செ.மீ., நுங்கம்பாக்கம், தளி, தேனி, சேலம், வால்ப்பாறை தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது என்றார்.