திமுக எம்.எல்.ஏ அன்பழகனுக்கு 'அல்வா' கொடுத்த தமிழக தேர்தல் கமிஷன்!
சென்னை: திருவல்லிக்கேணி திமுக எம்.எல்ஏ ஜெ.அன்பழகன் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் விடுத்த தேர்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் அளித்துள்ள புகாரில் ஜெ.அன்பழகன் கூறியிருப்பதாவது,
சென்னை தியாகராய நகரில் நான் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகிறேன். கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அதன்பிறகு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலிலும் நான் வாக்களித்துள்ளேன்.
இந்த நிலையில் கடந்த 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் எனது பெயர், வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று நான் பார்த்தபோது, எனது பெயர் இடம் பெறவில்லை. ஆனால் எனது குடும்பத்தினரின் பெயர்கள் எல்லாம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
எம்.எல்.ஏ.வாக இருக்கும் எனக்கே இது போன்ற ஒரு நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை குறித்து நினைத்தால் மிகவும் கவலையாக உள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து, தேர்தல் அதிகாரி பிரவீண்குமார், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயனை தொடர்பு கொண்டு, எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் பெயர், வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருப்பது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications