ரூ.14 லட்சம் கையாடினாரா அமைச்சர் செல்லப்பாண்டியன்.. அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஹைகோர்ட் நோட்டீஸ்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட வேளாண் பொறியியல் பணிகள் கூட்டுறவு சங்கத்தில், தற்போதைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன் தலைவராக இருந்தபோது, முறைகேடு நடந்ததாகவும், நடவடிக்கை கோரியும், தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தூத்துக்குடி புதுக்கோட்டை காந்திமதிநாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை பொறியியல் பணிகள் கூட்டுறவு சங்கம் (ஏஇஎஸ்-17) மூலம் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டது. அப்போது, இச் சங்கத்திற்கு 1997 ம் ஆண்டு முதல் 2000 ம் ஆண்டு வரை தலைவராக இருந்தவர் சி.த.செல்லபாண்டியன். இவர் தற்போது தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.
சி.த.செல்லபாண்டியன் தலைவராக இருந்த காலத்தில் சங்கப்பணம் 8 லட்சத்து 10 ஆயிரத்து 446 ரூபாய் பல்வேறு வகைகளில் கையாடல் செய்யப்பட்டதாக 1998 - 99 ம் ஆண்டின் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், சரக்கு இருப்பு கையாள்வதில் 6 லட்சத்து 39 ஆயிரத்து 520 ரூபாய் மோசடி நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் சி.த.செல்லபாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க கோரியம், கையாடல் பணத்தை பறிமுதல் செய்யக் கோரி வேளாண்மை ஆணையம் மற்றும் வேளாண்மை பொறியியல் பணிகள் பதிவாளர், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர், சங்கத்தின் தனி அதிகாரி ஆகியோருக்கு 2011 டிசம்பர் 21 ம் தேதி மனு அனுப்பினேன்.
எனது மனு மீது அவர்கள் யாரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருகின்றனர். இவை குறித்த விவரங்களை தமிழக தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ளேன். எனவே, அமைச்சர் செல்லப்பாண்டியன் மீதும், முறைகேட்டிற்கு துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுதாகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications