சைபர் குற்றங்களுக்கு தயவு தாட்சண்யம் இல்லாமல் கடும் தண்டனை: சென்னை கமிஷ்னர் எச்சரிக்கை

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:
இணையதளத்திலும், பேஸ்புக்கிலும் பெண்களை இழிவு படுத்தி தகவல் அனுப்பினால் தயவு தாட்சண்யம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடித்து போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று நினைக்கிறார்கள். அது தவறு. இது போன்ற புகார்களில் குற்றவாளிகளை எளிதில் பிடித்து விடுவோம்.
பாடகி சின்மயி கொடுத்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை இந்த வழக்கில் தேடி வருகிறோம். சென்னை சைபர் கிரைம் போலீசில் இது போன்ற 19 புகார் மனுக்கள் தற்போது விசாரணையில் உள்ளது.
பெண்கள் அதிகம் பாதிப்பு
பிளஸ்-2 மாணவி ஒருவரை, இது போல் இணையதளத்தில் அவதூறு பரபரப்பி தொல்லை கொடுத்ததால், அவர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார் என்று அவரது பெற்றோர் திங்கட்கிழமை புகார் கொடுத்துள்ளனர். கடந்த 2 மாதங்களாக அவர் எந்தவித செயல்பாடும் இல்லாமல் மன ரீதியாக பாதிப்படைந்துள்ளார்.
காதலை நிராகரித்ததால், தனது காதலன், பேஸ்புக்கில் நான் ஏற்கனவே திருமணமாகி விட்டதாக தவறான தகவலை பரப்பி விட்டதாக இளம் பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். இந்த தவறான தகவலை காதலன் வெளியிட்டதால், அந்த பெண்மணி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மதுரை மற்றும் செஞ்சியில் இது போன்ற பிரச்சினையில் சிக்கி 2 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர்.
தைரியமா புகார் கொடுங்க
இதுபோல் பிரச்சினை வரும்போது, பெண்கள் தவறான முடிவுக்கு போகக்கூடாது. துணிச்சலாக போலீசுக்கு புகார் கொடுக்க வரவேண்டும். குற்றவாளிகளை நாங்கள் கைது செய்து, ஜாமீனில் வெளிவர முடியாத தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்போம். இந்த சட்டப்பிரிவுகளில் குற்றம் நிரூபணமானால் அபராதத்தோடு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். இது போன்ற வழக்குகளை விசாரிக்கும் சென்னை சைபர் கிரைம் போலீஸ் மேலும் பலப்படுத்தப்படும். இவ்வாறு காவல்துறை ஆணையர் ஜார்ஜ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications