பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்: ஓ.பன்னீர் செல்வம்
கிருஷ்ணகிரி: வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் கட்சி பணி மற்றும் மக்கள் பணி குறித்த கட்சி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி தேவராஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மின்சார துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் வைத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது பேசிய அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இங்கு கூடியுள்ள கூட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பது நிரூபணமாகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் தொகுதியில் தான் ஜெயலலிதா முதன் முதலாக வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தற்போது சிறப்பாக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா, யாருடைய ஆதரவுமின்றி 93 சதவீதம் வெற்றி பெற்றுள்ளார்.
மத்திய அரசு எந்த பிரச்சினையையும் சுமூகமாக தீர்த்து வைக்கவில்லை. காவிரிப் பிரச்சனையில் கடந்த 17 ஆண்டுகளாக எந்த முடிவும் ஏற்படவில்லை. உச்ச நீதிமன்றத்தை அணுகிய பிறகு தான் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அமலாகியது. முல்லை பெரியாறு பிரச்சனையிலும், அணை பாதுகாப்பாக உள்ள என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மகாராஜாவின் சொத்தாக இருந்த கட்சத் தீவை முதல்வர் ஜெயலலிதா கண்டிப்பாக மீட்பார். வலிமையான தலைமையின் கீழ் அதிமுகவும், தமிழக அரசும் நடந்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசுகளில் வலிமை இல்லை.
தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதில் சந்தேகமும் இல்லை. கடந்த பொது தேர்தலில் ஜெயலலிதா முதல்வராக வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றோம். அதேபோல வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் முதல்வர் ஜெயலலிதாவை முன்னிறுத்தி 40 தொகுதிகளிலும் வாக்கு சேகரிக்க வேண்டும். இதன்மூலம் முதல்வர் ஜெயலலிதா, பிரதமராக வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.
கூட்டத்தில் பேசிய மின்சார துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது,
மத்திய அரசில் அங்கம் வகித்து வந்த திமுக அரசு, தமிழகத்தில் இருந்த பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்யவில்லை. காவிரி பிரச்சனை மற்றும் மின்சார தட்டுப்பாடு ஆகியவற்றை திமுக அரசு தீர்க்கவில்லை. தற்போது மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாட்டிற்கு திமுக அரசின் தவறான திட்டங்கள் தான் காரணம் என்றார்.
அமைச்சர் கே.பி.முனுச்சாமி கூறியதாவது, நாட்டு மக்கள் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவற்றின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். கடந்த 8 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் ஊழல் பெருகிவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications