என்னுடைய 'ரெக்கமண்டேஷனை' மேலிடம் ஏற்கவில்லை... அழகிரி குமுறல்

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தென்மண்டல அமைப்பு செயலாளர் என்ற முறையில், மதுரை மாநகர், மாவட்டம், தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு அணி நிர்வாகிகள் நியமனத்தில் என்னுடைய பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பதவி கிடைக்காதவர்களும் இன்று என்னை சந்தித்தனர். அதே போல் மற்ற மாவட்டங்களிலும் என்னுடைய பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
திமுகவினர் மீது இந்த அரசு தொடர்ந்து பொய் வழக்குகளை போட்டு வருகிறது. பழிவாங்கும் நடவடிக்கை ஒன்றைத்தான் அரசின் நிர்வாகம் செய்து கொண்டு இருக்கிறது. மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.
ஜப்பான் நாட்டிற்கு நான் சென்று வந்த பிறகு, அங்குள்ள பல நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய மிகுந்த ஆர்வம் காட்டின. அந்த வகையில் மேற்கு வங்காள மாநிலத்தில் புதிய தொழிற்சாலை ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டம் தொடங்குவதற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் தமிழக அரசு இன்னும் அனுமதி தரவில்லை. புதிய திட்டங்களை தொடங்குவதற்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லை.
மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை போக்குவதற்காக கடந்த திமுக ஆட்சியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு நான் அடிக்கல் நாட்டினேன். திட்டப்பணிகளும் தொடங்கின. ஆனால் அதிமுகவினர் அதை தங்கள் திட்டம் போல் அறிவித்து அடிக்கல் நாட்டி வருகின்றனர்.
மேலூரில் கிரானைட் பாலிஷ் போடும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பணிகள் நடந்தன. தற்போது அந்த பணிகள் முடங்கி போய் உள்ளன. மதுரை நகரை சுகாதாரமாக பராமரிக்க 18 இடங்களில் நவீன இலவச கழிப்பறைகள் எனது முயற்சியால் கட்டப்பட்டன. தற்போது அவை அனைத்தும் கட்டணக் கழிப்பிடங்கள் ஆக்கப்பட்டு விட்டன.
தமிழகத்தின் மின்பற்றாக்குறையை தீர்க்க பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா? நேரடியாக சந்தித்து வலியுறுத்த வேண்டாமா? மத்திய அரசிடமும் போதிய அளவு மின்சாரம் இல்லை. எனவே கூடங்குளம் போன்ற திட்டங்கள் செயல்படும் போது தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் கிடைக்கும் என்றார் அவர்.
சமீபத்தில் மு.க.ஸ்டாலின் தனது மகன் மற்றும் மருமகனுடன் மதுரைக்கு நேரில் வந்து அழகிரியை சந்தித்துப் பேசினார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications