தேமுதிக கப்பலில் ஓட்டை.... எப்படி சரி செய்வார் 'நாய்' கேப்டன்?
சென்னை : தேமுதிகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் தினசரி இரண்டு பேராக எதிர்கூடாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இதுவரை தேமுதிக நிர்வாகிகள் பலர்தான் அதிமுக, திமுகவில் இணைந்தனர். ஆனால் இப்பொழுது கட்சி எம்.எல்.ஏக்கள் நால்வர் ஆளுங்கட்சியை நாடிச்சென்றிருப்பதால் பரபரப்பு அதிகரித்துள்ளது. 'நாய் ஸ்பெஷலிஸ்ட்' கேப்டன் கப்பலில் ஓட்டை விழ என்ன காரணம் என்று பட்டியலிட்டுள்ளனர் அரசியல் விமர்சகர்கள்.

29 எம்.எல்.ஏக்கள் உற்சாக தேமுதிக
2011 சட்டமன்றத் தேர்தலில் பல பிரச்சினைகளுக்கு இடையே அதிமுக உடன் கூட்டணி வைத்து 29 எம்.எல்.ஏக்களை சட்டமன்றத்திற்கு அனுப்பியது தேமுதிக. அந்த சந்தோசம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை.
கை காசை போட்டு செலவழித்த தேமுதிகவினர், எதிர்கட்சி அந்தஸ்தும் கிடைக்கவே விட்டதை பிடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டனர். ஆனால் பட்டென்று கூட்டணியை முறித்து நினைப்பில் மண்ணைப் போட்டார் விஜயகாந்த்.
தேமுதிகவின் இலக்கு என்ன என்பதே பலருக்கு இன்னும் புரியாமல் உள்ளதாம். எதற்காக அதிமுகவைப் பகைத்தோம், அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாமல் விழிக்கும் பலர் கட்சியை விட்டு அடுத்தடுத்து இடத்தை மாற்ற ஆரம்பித்துள்ளனர்.

முதலில் விழுந்த இரண்டு விக்கெட்
தேமுதிக கூடாரத்தில் இருந்த முக்கிய தலையான மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ சுந்தர்ராஜனும், திட்டக்குடி எம்.எல்.ஏ தமிழழகனும் முதலில் விழுந்த இரண்டு விக்கெட்டுகள். சொத்துக்கள் பராமரிப்பில் தகராறு ஏற்பட்டதால் சுந்தர்ராஜனும், தன் மீதான வழக்குகள் குறித்து கட்சி தலைமை கண்டு கொள்ளாததால் தமிழழகனும்,கட்சித் தலைமை மீது, அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
சினிமாத்துறையில் ஆரம்ப காலத்தில் இருந்தே விஜயகாந்துடன் நட்பாக இருந்தவர் பேராவூரணி தொகுதி எம்.எல்.ஏ அருண்பாண்டியன். அதேபோல் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பனும் சினிமாத்துறை நண்பர்தான். இவர்கள் இருவரும் இப்போது அதிமுக கோட்டையில் நுழைந்துள்ளனர். இதன் மர்மம் பிடிபடவில்லை.

29 ல் 10 விக்கெட் விழலாம்!
தேமுதிக எம்.எல்.ஏக்கள் 10 பேர் வரை வெளியே கிளம்ப தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் தவிர முக்கியத் தலைவர்கள் சிலரும் கூட வளைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
விஜயகாந்த்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறி போக வேண்டும், தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்க வேண்டும். இதுதான் ஆளுங்கட்சியின் அதிரடி அசைன்மெண்ட். இதை கருத்தில் கொண்டு 29 எம்.எல்.ஏக்களில் 4 பேரை இழுத்துள்ளனர்.

முரசு சின்னம் முடங்குமா
லோக்சபா தேர்தல் சமயமாக பார்த்து கட்சியை உடைத்து, அக்கட்சியின் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும். அப்படி நடந்தால் மறுபடியும் தனித் தனி சின்னத்தில் தேமுதிக நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். அது தனக்கு பெரும் சாதகமாக அமையும் என அந்தக் கட்சி நினைக்கிறதாம்.
தேமுதிகவைப் பொறுத்தவதரை அவரது மச்சான் சுதீஷ், மனைவி பிரேமலதாவைத் தாண்டி எதுவும் செய்ய முடியாத நிலை இருப்பதால் பல முக்கியத் தலைவர்கள் கூட புகைச்சலில் உள்ளனராம்.

ஓட்டை எப்போ விழுந்துச்சு?
விஜயகாந்த்தால் வெகுவாக பாராட்டப்பட்ட ரெஜீனா பாப்பா முதலில் தனது மாநில மகளிர் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அடுத்து திண்டுக்கல் முத்துவேல்ராஜா, சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட்ட வேல்முருகன் என அடுத்தடுத்து வெளியே கிளம்பினர்.
மதுரையில் முதன் முதலாக விஜயகாந்த் ரசிகர் மன்றத்தை உருவாக்கிய மதுரையைச் சேர்ந்த முத்து என்பவர் போனபோதுதான் விஜயகாந்த்துக்கே சற்று அதிர்ச்சியானது. திமுகாவில் இருந்து தேமுதிகவிற்கு வந்த கடலூர் ஏ.ஜி சம்பத் விஜயகாந்த் கட்சியை நடத்துவதைப் பார்த்து கடுப்பாகி மீண்டும் திமுகவிலேயே ஐக்கியமானார்.

தப்பான தலைமை... தகராறு நிலைமை
ஒரே ஒரு எம்.எல்.ஏவை மட்டும் தேமுதிக வைத்திருந்துபோது கூட கட்சி படு கட்டுக்கோப்புடன் இருந்தது. அடுத்தடுத்து வாக்கு வங்கியை கூட்டிக் கொண்டே போனது. ஆனால் தற்போது 29 எம்.எல்.ஏக்கள் கையில் இருந்தும் கூட கட்சியை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியாமல் அக்கட்சித் தலைமை கடுமையாக தடுமாறி வருகிறது என்பதே உண்மை.
தேமுதிக என்னும் கப்பலில் ஓட்டை விழுந்துவிட்டது. எம்.எல்.ஏக்கள் வெளியேறி வருகின்றனர். ஓட்டையை அடைத்து கரைசேர்வாரா? அல்லது கடலில் மூழ்கிப்போவாரா விஜயகாந்த்து என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications