சென்னையில் வரும் 29ம் தேதி முற்றுகை போராட்டம்: கூடங்குளம் போராட்ட குழுவினர்
சென்னை: கூடம்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில், வரும் 29ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள முற்றுகை போராட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ளுமாறு, கூடங்குளம் பேராட்ட குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்து கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான பேராட்ட குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
நம் தொப்புள்கொடி உறவுகள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது, டெல்லியின் ஊமை நாயகி ஒன்றும் அறியாதது போல் ஒதுங்கி இருந்தாள். உடனிருந்த இனத்துரோகிகள் முதுகுவலி, உண்ணாவிரதப் படம் காட்டினர்.
தமிழரின் வாழ்வுரிமைகள், வாழ்வாதாரங்கள், வருங்கால சந்ததியர் அழித்தொழிக்கப்படும் நிலையில், அழுது புலம்பிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் கூட்டம் செயற்கை மின்வெட்டை மிகைப்படுத்தி அடிக்கின்றார்.
துரோகிகள் முதுகில் குத்த, எதிரிகள் நெஞ்சைக் கிழிக்க, எடுபிடிகள் வயிற்றில் அடிக்க, என்ன செய்யப் போகிறாய் தமிழினமே? ஏதாவது செய்ய வேண்டும் என்றால் எழுந்து வா சென்னைக்கு. அக்டோபர் 29 அன்று காலை 10 மணிக்கு சட்டசபை முற்றுகையில் சந்திப்போம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.