நேத்து எத்தனை அடி, இன்னிக்கு எத்தனை... இதைத்தான் விஜயகாந்த்திடம் நாம் பார்க்கனும்!
சென்னை: இன்னிக்கு எத்தனை அடி, நேத்து எத்தனை அடி. நேற்றை விட இன்று 2 அடி குறைவாக வந்ததா, அது அத்தனையும் நமக்கு லாபம். இதைத்தான் நாம பார்க்கனும். அதை விட்டுட்டு அடிச்சுட்டாங்க, அடிச்சுட்டாங்கன்னு வருத்தப்படக் கூடாது. வடிவேலு ஒரு படத்தில் பேசிய இந்த வசனம் விஜயகாந்த்தைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பொருந்தும்.

ஸ்ரீரங்கத்தில் ரசிகருக்கு தர்ம அடி
விஜயகாந்த் அடிப்பதும், திட்டுவதும், நாக்கைத் துருத்துவதும் புதிதல்ல. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு தர்மபுரி பட ஷூட்டிங்குக்காக ஸ்ரீரங்கம் போயிருந்தபோது தன்னை ஆர்வ மிகுதியால் பார்க்கத் துடித்த ரசிகரையே சரமாரியாக அடித்துத் தள்ளியவர் விஜயகாந்த்.

வேட்பாளரையே வெளுத்துக் கட்டியவர்
சட்டசபைத் தேர்தலின்போது பாஸ்கர் என்ற தனது கட்சி வேட்பாளரின் பெயரை மாற்றிச் சொல்லி கட்சியினர் மத்தியிலேயே கேலிக்குள்ளானபோது, கடும் ஆத்திரம் ஏற்பட்டு தனது தவறை மறந்து, அண்ணே என் பேரை மாத்திச் சொல்லிட்டீங்க என்று அப்பாவியாக சுட்டிக்காட்டிய வேட்பாளரையே வேனுக்குள்ளேயே வைத்து மக்கள் மத்தியில் வெளுத்துக் கட்டியவர் விஜயகாந்த்.

சட்டசபையில் நாக்கைத் துருத்தி ..
சட்டசபையில் அதிமுகவினரின் பேச்சால் கோபமடைந்து, கொந்தளித்து நாக்கைத் துருத்தியும், கை முஷ்டியை மடக்கிக் காட்டியும், வெளியே வாடா என்றும் பேசி புதிய வரலாறு படைத்தவர் விஜயகாந்த்.

விமான நிலையத்தில் தகராறு
நேற்று சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் நடந்து கொண்ட விதம், அவர் பேசிய பேச்சு, உபயோகித்த வார்த்தைகள், ஒரு நாகரீகமான அரசியல் தலைவருக்குரியதா என்பதை விஜயகாந்த்தே யோசித்துப் பார்த்துச் சொல்ல வேண்டும்.

கோபம் புதிதல்ல
விஜயகாந்த்தும், கோபமும், ஆத்திரமும் ஒட்டிப் பிறந்தவை. வெளியிலேயே இப்படி நடந்து கொள்ளும் விஜயகாந்த், கட்சிக் கூட்டத்திற்குள்ளேயும் கூட பலமுறை தனது கட்சியினரை, ஏன் மூத்த தலைவர்களையே கடுமையாக சாடியும், சிலரை அடித்தும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக கட்சியினரே கூறுகிறார்கள்.
விஜயகாந்த் நல்ல தலைவராக மாறுவாரா என்பதை அவரது நடத்தைதான் இனி நிரூபிக்க வேண்டும்!












Click it and Unblock the Notifications