ஜெ.,வை சந்தித்த தேமுதிக எம்எல்ஏவிற்கு கொலை மிரட்டல்-வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசிய தேமுதிக எம்.ஏ.எல் மைக்கேல் ராயப்பனுக்கு, மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சினிமா நடிகரும், பேராவூரணி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ.மான அருண்பாண்டியன் மற்றும் ராதாபுரம் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் ஆகியோர், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினர். அப்போது தங்களின் தொகுதிகளில் மேற்கொள்ள வளர்ச்சி பணிகளை குறித்து கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் மேற்கண்ட 2 தேமுதிக எம்.எல்.ஏ.க்கள், முதல்வரை சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தேமுதிகவில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் முதல்வரை சந்தித்து பேசிய பிறகு, தனது செல்போனில் அழைத்த சிலர், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சச்சிதானந்தம் உத்தரவின் பேரில், விருகம்பாக்கத்தில் உள்ள மைக்கேல் ராயப்பனின் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பாஸ்கர் காலனியில் உள்ள அவரது அலுவலகம் ஆகியவற்றிற்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மைக்கேல் ராயப்பனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.