'நிலம்' கரையைக் கடக்கும்போது தப்பிக்க சில டிப்ஸ்!

அண்மையில் தானே புயலை தமிழகம் எதிர்கொண்டது.மணிக்கு நூறுகிலோ மீட்டருக்கும் மேலாக வீசிய கொடுங்காற்றினால் கடலூர் மாவட்டமே நிர்மூலமானது.
இந்தப் புயலைத் தொடர்ந்து இந்த ஆண்டின் முதல் புயலாக நிலம் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்தமான் அருகே காற்றழுத்தத் தாழ்வுநிலை மையம் கொண்டபோது அதாவது கடந்த வாரமே தமிழகத்துக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுவிட்டது.
மேலும் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. புயல் சென்னை நோக்கி வருவதும் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடலோர மக்களே கவனம்
குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீனவர்களே கடலுக்குள் போகாதீர்கள்
கடல் சீற்றமாக இருந்து வருவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக் கூடாது என்று கடந்த 3 நாட்களாகக் கூறப்பட்டு வருகிறது.
தற்போது புயல் கரையைக் கடக்க இருப்பதால் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகளும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளன.
பீச் பக்கம் எட்டிப்பார்க்காதீங்க...
சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை தவிர மகாபலிபுரத்துக்கு அருகே உள்ள கோவளம், விஜிபி, நீலாங்கரை, பாலவாக்கம் உள்ளிட்ட அனைத்து கடற்கரைக்கும் செல்வதைத் தவிர்க்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
அத்துடன் மக்கள் கூடும் கடற்கரைப் பகுதிகளில் போலீசாரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்கம்பங்கள் சாயலாம்
பொதுவாக மழைகாலத்தில் தேங்கிக் கிடக்கும் மழைநீரில் மின்சாரம் பாய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. புயல் காலங்களில் முறிந்து விழும் மரங்கள், மின்கம்பங்கள் அருகே செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
மரங்கள் விழலாம் - கீழே ஒதுங்காதீர்கள்
புயலடித்துக் கொண்டிருக்கும் நிலையில் மரங்களின் கீழே மழைக்கு பாதுகாப்பு என ஒதுங்கி நிற்பதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் மழை நீரில் நடந்து போவதைத் தவிர்க்கவும்
சுவிட்சுகளை முடிந்தவரை ஆப் செய்யுங்கள்
புயல் காற்று வீசும் நிலையில் வீடுகளில் மின்சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கான சுவிட்சுகளை கூடுமானவரை அணைத்தே வைக்கவும்.
மெழுகுவர்த்திகள் ஸ்டாக் இருக்கட்டும்
மின்சாரம் துண்டிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் வீட்டில் மெழுகுர்த்திகளை போதிய அளவில் வைத்துக் கொள்வது நல்லது.
தற்போதைய நிலம் புயலுக்கான முன்னெச்சரிக்கையின் போது வானிலை மையமும் கூட தகவல் தொடர்பு சாதனங்கள் பாதிக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
அவசர உதவிக்கு...
சென்னையில் புயல், மழை பற்றிய அறிய 044-28447734 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications