மோடியிடம் அமெரிக்காவும் ‘சரண்டர்’: விசா தரத் தயாராம்!

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய மதக்கலவரம் நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். பலர் பதிப்பிற்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா அளிக்க அமெரிக்கா மறுத்து வந்தது. 2005ம் ஆண்டு அவர் அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பித்தும் அளிக்கப்படவில்லை. இது நரேந்திர மோடிக்கு அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
விசா தடை நீக்கம்
இந்நிலையில், மோடி எப்போது வேண்டுமானாலும் அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பிக்கலாம் எனவும், அவர் விண்ணப்பித்தால் அதனை பரிசீலித்து அவருக்கு விசா வழங்குவோம் எனவும் செவ்வாய்கிழமையன்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுபற்றி பேசிய மத்திய மற்றும் தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க துணைச் செயலாளர் ராபர்ட் பிளேக், ‘எங்கள் நாடு குஜராத்துடன் நல்லுறவைக் கொண்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்களின் மிகமிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக குஜராத் இருக்கிறது. மோடியைப் பற்றி நான் யூகிக்க விரும்பவில்லை. அவர் எப்போது வேண்டுமானாலும் விசாவுக்காக விண்ணப்பிக்கலாம். மோடி விண்ணப்பித்தால் அவரது விண்ணப்பம் உடனடியாக பரிசீலிக்கப்படும்' என்று கூறியுள்ளார்.
இணக்கம் காட்டிய இங்கிலாந்து
மோடியை தொடர்ந்து புறக்கணித்து வந்த இங்கிலாந்து அரசு சமீபத்தில் மோடி மற்றும் குஜராத்துடனான உறவைப் புதுப்பித்துக் கொண்டது. இந்தியாவுக்கான இங்கிலாந்து உயர் ஆணையர் ஜேம்ஸ் பெவன் மோடியை சந்தித்துப் பேசினார்.
இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குஜராத் முதல்வருடன் இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி வருவதால் 2014 ம் ஆண்டு தேர்தலில் பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.












Click it and Unblock the Notifications