தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற கும்பல் மீது கல்வீச்சு: 3 பேர் பலி
பரமக்குடி: தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற குழுவினர் மீது பரமக்குடியில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பேர் படுகாயமடைந்து பலியாகினர். அதையடுத்து நடந்த மோதல் சம்பவத்தில் கல்வீசி அரசு வாகனங்கள் உடைக்கப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி கலவரத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடம் உள்ளது. ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் தேதி இங்கு தேவர் ஜெயந்தி விழாவும், குரு பூஜையும் நடைபெறுவது வழக்கம். இதேபோல இந்த ஆண்டும் நேற்று தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
இதில் பல பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பசும்பொன் கிராமத்திற்கு பரமக்குடி, பார்த்திபனூர் வழியாகவும், முதுகுளத்தூர் வழியாகவும் செல்ல முடியும். இதில் முதுகுளத்தூர் வழியாக சென்ற குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், போலீசார் அவ்வழியாக செல்ல தடை விதித்தனர்.
இந்த நிலையில் கடந்த 25ம் தேதி மருதுபாண்டியர் குரு பூஜையையொட்டி பரமக்குடியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதில் பல்வேறு தலைவர்களின் படங்களுக்கு இடையே, இமானுவேல்சேகரனின் படமும் இடம் பெற்றிருந்தது.
இதை கண்டு அதிருப்தியடைந்த ஒரு கும்பல், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மோதலில் ஈடுபட்டனர். மேலும் கடந்த 27ம் தேதி அந்த போஸ்டர்களை சிலர் கிழித்தெறிந்தனர். இதனால் பரமக்குடி பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகி, மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் பசும்பொன் கிராமத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த முதுகுளத்தூர் வழியாக சிலர் கோஷமிட்டவாறு, மோட்டர் சைக்கிளில் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர், அவ்வழியாக சென்ற ஒரு கார் மீது கற்களை வீசினர். இதில் பயந்து போன காரில் இருந்த 10 பேர் தப்பியோடிவிட்டனர். கார் டிரைவர் மட்டும் தாக்குதல் கும்பலிடம் சிக்கி கொண்டார். விருதுநகர் மாவட்டம் வேலங்குடியை சேர்ந்த டிரைவர் சிவக்குமார் மீது கற்கள் வீசப்பட்டதில் அவர் பலியானார்.
அதேபோல திருப்புவனம் அல்லிநகரத்தை சேர்ந்த மலைக்கள்ளன், வீரமணி ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று மதியம் 2.30 மணியளவில், அதே வழியில் வந்தனர். அப்போது அப்பகுதியினர் அவர்களின் மீதும் கற்களை வீசி தாக்கினர். இதில் இருவரும் படுகாயமடைந்து பலியாகினர்.
இது குறித்து தகவல் அறிந்த தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ்தாஸ் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தாக்குதல் சம்பவங்களில் 3 பேர் பலியானதை தொடர்ந்து, பரமக்குடி பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. இதனால் சம்பவம் நடத்த இடத்திற்கு செல்ல போலீசார் தடைவிதித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு கும்பல், போலீசார் மற்றும் அரசு வாகனங்களின் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் வருவாய் துறைக்கு சொந்தமான 3 வாகனங்கள், போலீஸ் ஜீப் உள்பட 5க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தாசில்தாரின் கார் டிரைவர் வெள்ளைச்சாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை உணர்ந்த போலீசார், தடியடி நடத்தி தாக்குதல் கும்பலை கலைத்தனர். கலவரம், கல்வீச்சு காரணமாக பரமக்குடி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரையில் வெடிகுண்டு வீச்சு: 18 பேர் காயம்
மதுரை சிந்தாமணி ஊரில் தேவர் ஜெயந்தி விழா முடித்து திரும்பி கொண்டிருந்த வேன் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் 18 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications