புயல், தொடர் மழையால் நாகை மாவட்டம் கடும் பாதிப்பு
நாகப்பட்டனம்: நாகப்பட்டனம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் புயல் காரணமாக பெய்து வந்த கன மழை காரணமாக விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீரே இல்லாமல் வாடி வந்த அவர்களுக்குத் தற்போது தொடர் மழை காரணமாக பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 4 லட்சம் ஏக்கர் சம்பா நெற் பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன.
நிலம் புயல் காரணமாக, நாகை மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும், 1,500 கட்டுமர மீனவர்களும் நேற்று 3வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மாவட்டத்தில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. 6 மின் கம்பங்களும் சாய்ந்தன. சுனாமி குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. மாவட்டத்தில் 3 லட்சம் எக்டேர் பரப்பளவில் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் இடைவிடாமல் மழை பெய்ததால் 1 லட்சம் ஏக்கரில் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. புயல் காரணமாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது.
தொடர் மழையால் திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலாலய தெப்பக்குளத்தின் வடகரை சுற்றுச்சுவர் கடந்த 23ம் தேதி 66 அடி நீளத்திற்கு இடிந்து விழுந்தது. இடிந்த பகுதி தற்காலிகமாக மணல் மூட்டைகளை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இவ்வழியே போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக குளத்தின் வடகரை பகுதியில் மேலும் 25 அடி நீளத்திற்கு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
தஞ்சையில் 2 நாட்களாக தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தஞ்சை களிமேடு, சக்கரசாமந்தம், தென்னங்குடி, பள்ளியேறி, திருவையாறு அருகே கண்டியூர், திருப்பூந்துருத்தி, ஒரத்தநாடு அருகே மேலஉளூர், பொன்னாப்பூர், தென்னமநாடு போன்ற பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மூழ்கியுள்ளன.
ஏற்கனவே குறுவையை இழந்து பொருளாதார ரீதியில் கடுமையான பாதிப்பில் சிக்கியுள்ள விவசாயிகள், தற்போதைய மழையால் பயிர்கள் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். மேலும் இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் மழையாலும், குளிர்காற்று வீசுவதாலும் சம்பா சாகுபடி பணிகளில் ஈடுபட முடியாமல் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் தவித்து வருகின்றனர். தஞ்சை, பாபநாசம், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் குறுவை பயிர் மழையால் சாய்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications