சத்தம் போட்டதால் 6 வயது சிறுமி குத்திக் கொலை, சிறுவனின் கழுத்து அறுப்பு
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சத்தம் போட்டதற்காக 6 வயது சிறுமி குத்திக் கொலை செய்யப்பட்டாள். மேலும் அதே காரணத்திற்காக கழுத்து அறுக்கப்பட்ட 10 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ளது டிக்கிலோட்டா துவக்கப் பள்ளி. அந்த பள்ளியில் பயிலும் குழந்தைகள் தொடர்ந்து சத்தம் போட்டு வந்துள்ளனர். அவர்களின் சத்தம் அப்பகுதியைச் சேர்ந்த மதன் கோபி(35) என்பவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் அப்பள்ளிக் குழந்தைகள் மீது கடுப்பில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த குழந்தைகள் வழக்கம் போல் சத்தம் போட்டுள்ளனர். இதனால் கடுப்பான மதன் கத்தியை எடுத்து வந்து பள்ளி வளாகத்தில் இருந்த ஜஸ்மி மர்மு என்ற 6 வயது சிறுமியைக் குத்திக் கொன்றார். அப்படியும் ஆத்திரம் அடங்காத அவர் சிவாநாத் டிக்கி(10) என்ற சிறுவனின் கழுத்தை அறுத்தார். இதையடுத்து டிக்கி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே மதனைப் பிடித்த பொதுமக்கள் அவரை நைய்யப் புடைத்த பிறகு போலீசில் ஒப்படைத்துள்ளனர். இந்த கொடூரச் சம்பவம் நடந்த அன்று அந்த பள்ளியில் பணிபுரியும் ஒரே ஆசிரியர் பணிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications