ராமநாதபுரத்தில் கல்லூரி பஸ்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- டாக்டர் கார் மீது தாக்குதல் -பதட்டம்
ராமநாதபுரம்: தேவர் குரு பூஜை விழாவிற்கு சென்ற 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரோலியாக, ராமநாதபுரத்தில் கல்லூரி பஸ்கள் மீது பெட்ரோல் குண்டு வீச மர்மநபர்கள் முயன்றனர். மேலும் தனியார் மருத்துவமனை முன் நிறுத்தப்பட்டிருந்த டாக்டர் ஒருவரின் கார் அடித்து நொறுக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, கடந்த 30ம் தேதி தேவர் குரு பூஜைக்கு சென்ற சிவக்குமார், மலைக்கண்ணன், வீரமணி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பேரும் இறந்தனர். இதை கண்டித்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது.
இதனால் அப்பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் ஓடவில்லை. சாலைகளில் மக்கள் நடமாட்டமே குறைவாக இருந்தது.
இந்த நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள சந்தோஷ் தியேட்டரை அடுத்த பகுதியில் தனியார் என்ஜினியரிங் கல்லூரிக்கு சொந்தமான 13 பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்றிரவு இப்பகுதிக்கு மோட்டர் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், நிறுத்தப்பட்டிருந்த தனியார் கல்லூரி பஸ்களின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு, மோட்டர் சைக்கிளில் தப்பியோடிவிட்டனர்.
ஆனால் மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு பஸ்களின் மீது விழாமல், அப்பகுதியில் இருந்த தடுப்பு சுவர் மீது விழுந்து வெடித்தது. இதனால் பஸ்களுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் தப்பியது.
அதேபோல ராமநாதபுரத்தில் உள்ள அக்ரகார சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த டாக்டர் ஒருவரின் கார் மீது, மர்மநபர்கள் தாக்கினர். இதில் காரின் கண்ணாடிகள் நொறுக்கியது. நேற்று இரவு முழுவதும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பதட்டம் நீடித்தது.
ஆனால் இன்று காலையில் பதட்டம் ஓய்ந்தது. இதனால் காலை முதல் பஸ்கள் இயங்கப்பட்டன. ஆனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. பஸ்களிலும் குறைந்த அளவு பயணிகளே இருந்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து காரைக்குடி வழியாக மதுரைக்கும், திருச்சி, பட்டுக்கோட்டை, ஏர்வாடி, கீழக்கரை, ராமேசுவரத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டன. பதட்டம் மிகுந்த பகுதிகளாக கருதப்பட்ட பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடி ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
பரமக்குடியில் முக்குலத்தோர் சங்கங்கள் அறிவித்த பந்த் காரணமாக பஸ்கள் இயக்கப்படவில்லை. பள்ளிகள், கடைகள் ஆகியவை மூடப்பட்டிருந்தன. 144 தடை உத்தரவு இருப்பதால், மக்களை கூடி நின்று பேச வேண்டாம் என்று போலீசார் எச்சரித்தனர். பரமக்குடி, கமுதி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. திருப்புவனம் பகுதியில் ஆட்டோக்கள் மட்டுமே ஓடின. ஆங்காங்கே சில கடைகள் திறந்திருந்தன.












Click it and Unblock the Notifications