தலைமுடிக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்த முயன்ற இலங்கை பெண் கைது
சென்னை: இலங்கையில் இருந்து தலைமுடிக்குள் தங்க கட்டிகளை வைத்து மறைத்து, சென்னைக்கு கடத்த முயன்ற பெண், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இலங்கையில் இருந்து சென்னைக்கு நேற்று காலையில் விமானம் ஒன்று வந்திறங்கியது. இதில் வந்தவர்களிடம் சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண்ணின் தலைமுடி வழக்கத்திற்கு மாறான மிகவும் உயர்ந்து காணப்பட்டது.
இதை கண்டு சந்தேகமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரது தலைமுடியை சோதனையிட்டனர். அப்போது அப்பெண்ணின் தலையில் இருந்த டோப்பா முடிக்குள் 877 கிராம் எடை கொண்ட 7 தங்க கட்டிகள் இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த சவுரியாமும்தாஜ் என்பதும், சுற்றுலா விசாவில் அவர் இந்தியாவிற்கு வந்ததும் தெரியவந்தது. மேலும் தனது தலைமுடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகளை குறிப்பிட்ட நபரிடம் ஒப்படைத்தால், இலங்கையை சேர்ந்த ஏஜெண்ட் அதற்கு ரூ.5 ஆயிரம் பணம் தருவதாக கூறியதும் தெரிந்தது.
மும்தாஜ் கடத்த முயன்ற தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.27 லட்சம் இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே மும்தாஜை இலங்கையில் இருந்து அனுப்பி வைத்த ஏஜெண்ட் யார்?, சென்னையில் அவரிடம் தங்க கட்டிகளை வாங்க இருந்த நபர் யார்? என்பவை குறித்த விசாரணை நடந்து வருகிறது.
'அயன்' படத்தில் நடிகர் சூர்யா, தனது தலைமுடியில் வைரங்களை மறைத்து வைத்து வெளிநாடுகளில் இருந்து கடத்தி வருவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதே பாணி, இலங்கையை சேர்ந்த மும்தாஜூம் கடத்த முயன்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications