All We Need to know: எல்பிஜி முதல் கிரெடிட் கார்டு வரை! ஜூலை 1-ல் நிகழும் மாற்றங்கள் என்னென்ன?
டெல்லி: ஜூலை 1 ஆம் தேதி பிறக்கவுள்ள நிலையில் மாதந்தோறும் பல்வேறு விதிகள் மாற்றப்படுகிறது. அந்த வகையில் கேஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்டு வரை என்னென்ன விதிகள் மாற்றத்திற்குள்ளாக போகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சில முக்கிய நிதி, நிர்வாக விதிமுறைகள் மாற்றம் அடைவது வழக்கமான ஒன்று. மேலும் ஜூலை 1 முதல் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையையும் செலவுத் திட்டத்தையும் பாதிக்கக் கூடிய பல மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. ஆதார் புதுப்பிப்பு முதல் எரிவாயு விலை வரை பல துறைகளில் இந்த மாற்றங்கள் நிகழும்.

ஜூலை முதல் ஆதார் இமெயில் முகவரியை புதுப்பிப்பதற்கான சிறப்பு சலுகையை UIDAI தெரிவித்துள்ளது.
சாதாரண சாமானியர்கள் முதல் வணிகர்கள் வரை அனைவரையும் பாதிக்கக் கூடிய அந்தப் பட்டியல் இதோ!
இந்திய ரயில்வேயில் புதிய விதிகள்!
ரயில் பயணங்களை மிகவும் பாதுகாப்பானதாகவும், முறைகேடற்றதாகவும் மாற்றுவதற்காக இந்திய ரயில்வே நிர்வாகம் சில அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
ஆதார் இணைப்பு கட்டாயம்: ஆன்லைன் மூலமாகவோ அல்லது ரயில்வே கவுண்ட்டர்கள் மூலமாகவோ 'தட்கல்' (Tatkal) டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, ஆதாருடன் இணைக்கப்பட்ட கணக்குகள் மூலமாக மட்டுமே இனி புக் செய்ய முடியும். போலிப் பதிவுகளைத் தடுக்க இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏஜென்ட்களுக்குத் தடை: தட்கல் புக்கிங் தொடங்கும் முதல் அரை மணி நேரத்திற்கு வணிக ரீதியான டிக்கெட் ஏஜென்ட்கள் டிக்கெட் புக் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. (ஏசி வகுப்புகளுக்கு காலை 10:00 முதல் 10:30 மணி வரையிலும், ஏசி அல்லாத சாதாரண வகுப்புகளுக்கு காலை 11:00 முதல் 11:30 மணி வரையிலும் இந்தத் தடை அமலில் இருக்கும்).
அபராதம் இரட்டிப்பு: டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களுக்கான குறைந்தபட்ச அபராதத் தொகை, 'ஜன் விஸ்வாஸ் சட்டத்தின்' கீழ் ₹250-லிருந்து ₹500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
காத்திருப்போர் பட்டியல் (Waiting List) மாற்றம்: ஏசி வகுப்புகளில் இருக்கைகள் வீணாவதைத் தடுக்க, காத்திருப்போர் பட்டியலின் வரம்பு 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சாதாரண ஸ்லீப்பர் வகுப்புகளுக்கான வரம்பு 30 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை புதுப்பிப்பதற்கான காலக்கெடு
இலவச சேவை நிறைவு: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தனது இணையதளத்தில் அடையாள மற்றும் முகவரிச் சான்றுகளை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ள வழங்கிய கால அவகாசம் ஜூலை 1-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
கட்டணம் அமல்: இந்தத் தேதிக்குப் பிறகு ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரில் ஆதார் மையங்களுக்குச் சென்றோ புதுப்பிப்புப் பணிகளைச் செய்யும்போது, அதற்கான நிலையான கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.
சிலிண்டர் மாதாந்திர விலை மாற்றம்: அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் (OMCs) தங்களின் மாதாந்திர விலை மறுஆய்வை ஜூலை 1 அன்று மேற்கொள்ளவுள்ளன.
வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்: சர்வதேச எரிபொருள் சந்தை நிலவரங்களின் அடிப்படையில், 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் 19 கிலோ வணிக சிலிண்டர்களின் புதிய விலை அன்றைய தினம் நாடு முழுவதும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.
கிரெடிட் கார்டு வெளிநாட்டுச் செலவுகள்: தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (LRS) கீழ், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் செய்யப்படும் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பதற்கான கடுமையான வெளிப்படைத்தன்மை விதிகள் அமல்படுத்தப்படுகின்றன.
முடக்கப்பட்ட வங்கி கணக்குகள்: கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு பரிவர்த்தனையும் செய்யாமல் செயலற்றுக் கிடக்கும் (Dormant Accounts) வங்கிக் கணக்குகளை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர, வாடிக்கையாளர்கள் நேரில் சென்று முறையான கே.ஒய்.சி (KYC) ஆவணங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது வங்கி விடுமுறை நாட்களையும் கருத்தில் கொண்டு பணப் பரிமாற்றத்தை முன்கூட்டியோ அல்லது விடுமுறைக்குப் பிறகோ செயல்படுத்திக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications