துவங்கிய வேகத்தில் விற்றுத் தீர்ந்த தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு

வரும் 13ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பண்டிகைக்கான முன்பதிவு தென் மாவட்ட ரயில்கள் உள்பட அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் முடிந்துவிட்டது. இந்நிலையில் பயணிகளின் வசதி கருதி நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, கோவைக்கு சிறப்பு ரயில்கள் விடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை எழும்பூர்-நாகர்கோவில் அதிவேக சிறப்பு ரயில் (வ.எண்-06747) 12ம் தேதி மதியம் 2.35 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும். மறுமார்க்கத்தில் 11ம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் அதிவேக சிறப்பு ரயில் (வ.எண்-06748) மறுநாள் அதிகாலை 6.05 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
திருநெல்வேலி-சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் (வ.எண்-06750) 8ம் தேதி, திருநெல்வேலியிலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மறுமார்க்கத்தில் 9ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (வ.எண்-06749) மறுநாள் மதியம் 2 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
சென்னை சென்ட்ரல்-கோவை வாராந்திர சிறப்பு ரயில் (வ.எண்-06015) 11ம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.40 மணிக்கு கோவையை சென்றடையும். மறுமார்க்கத்தில் 12ம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (வ.எண்-06016) மறுநாள் காலை 7.45 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும்.
அதேபோன்று, கோவை-சென்னை சென்ட்ரல் அதிவேக சிறப்பு ரயில் (வ.எண்-06618) 13ம் தேதி இரவு 9.10 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும். மறுமார்க்கத்தில், 14ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வ.எண்-06617) மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு கோவையை சென்றடையும்.
சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் சிறப்பு ரயில் (வண்டி எண்-06019) வரும் 10ம் தேதி இரவு.7.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் (வண்டி எண் -06020) 11ம் தேதி பகல் 1.20 மணிக்கு புறப்பட்டு 12ம் தேதி காலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடைகிறது.
திருச்சி-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக இயக்கப்படுகிறது. (வண்டி எண் 06802) திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு 12ம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.20 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் (வண்டி எண் 06801) சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் 15ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு திருச்சி சென்றடைகிறது.
சென்னை எழும்பூர்-தூத்துக்குடி சிறப்பு ரயில் விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படுகிறது. (வண்டி எண் 06001) சென்னை எழும்பூர்- தூத்துக்குடி சிறப்பு ரயில் 13ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.50 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து (வண்டி எண் 06002) 14ம் தேதி இரவு 6.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று 3ம் தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவித்தபடி இன்று காலை டிக்கெட் முன்பதிவு துவங்கியது. முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து சிறப்பு ரயில்களுக்குமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இன்று டிக்கெட் வாங்க பலர் நேற்று இரவே கவுண்டர்களில் வந்து காத்துக் கிடந்தனர். ஆனால் பலர் ஆன்லைனில் முன்பதிவு செய்ததால் நேற்று இரவில் இருந்து வரிசையில் காத்திருந்த பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications