உமாசந்திரன் எழுதிய நூல் எது... டிஎன்பிஎஸ்சி தேர்வில் இப்படியும் கேள்வி!
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடந்த டிஎன்பிஎஸ்டி குரூப் 2 தேர்வில் டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜின் தந்தை குறித்த ஒரு கேள்வியும் இடம் பெற்றிருந்ததாம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் குரூப் 2 தேர்வு நடந்தது. ஆனால் வினாத்தாள் முன்கூட்டியே லீக் ஆகி விட்டதால் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் இன்று நடந்தது. கடந்த தேர்வை எழுதியவர்கள் மட்டும் இதில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இந்தத் தேர்வில் ஒரு சுவாரஸ்ய கேள்வி இடம் பெற்றிருந்ததாக தேர்வு எழுதியவர்கள் குறிப்பிட்டனர். அதாவது டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜின் தந்தை குறித்த கேள்விதான் அது.
அதற்கு முன்பு நடராஜின் தந்தை குறித்த தகவலைப் பார்ப்போம்... நடராஜின் தந்தை பெயர் பூர்ணம் ராமச்சந்திரன். இவர் நடிகர் பூர்ணம் விஸ்வநாதனின் உடன் பிறந்த அண்ணன் ஆவார். உமா சந்திரன் என்ற புனை பெயரில் எழுதி வந்தார். பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
அவர் எழுதிய நூல்களில் ஒன்றுதான் முள்ளும் மலரும். இந்தக் கதையைத்தான் இயக்குநர் மகேந்திரன் பெற்று அதை முள்ளும் மலரும் என்ற பெயரிலேயே திரைப்படமாக்கினார். ரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி, ஷோபா ஆகியோர் நடித்த இப்படம் பெரும் ஹிட் ஆனது.
இப்போது டிஎன்பிஎஸ்சி கேள்விக்கு வருவோம்... பொருத்து என்ற பகுதியில், எழுத்தாளர் உமாசந்திரன் எழுதிய நூல் என்று கேட்கப்பட்டு அதற்குரிய பதில்கள் தரப்பட்டிருந்தன. அதில் முள்ளும் மலரும் என்ற விடையும் இருந்தாம்.












Click it and Unblock the Notifications