தமிழக முட்டை, கோழிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – கேரள அரசு உத்தரவு
நாமக்கல்: பறவைக்காய்ச்சல் பீதியால் தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் முட்டை மற்றும் கறிக்கோழிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை கேரள அரசு விலக்கிக் கொண்டுள்ளது. இதனால் கறிக்கோழி, முட்டை உற்பத்தியாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் தாக்கியதன் எதிரொலியாக கடந்த ஒரு வாரமாக, தமிழகத்தில் இருந்து முட்டை மற்றும் கறிக்கோழிகளை ஏற்றிச் சென்ற வாகனங்களை கேரளாவிற்குள் அனுமதிக்காததால், கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கமடைந்தன.
இந்த தடையை விலக்கிக் கொள்வது குறித்து, நாமக்கல் மண்டல கோழிப் பண்ணையாளர்கள், கேரளா முதலமைச்சர் உம்மன் சாண்டியை நேரில் சந்தித்து, கோரிக்கை விடுத்தனர். இதன்பின், தடையை நீக்க, கேரள அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இன்று பகல் 12 மணியில் முதல், கேரளா எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியாக, முட்டை மற்றும் கறிக்கோழி வாகனங்கள் அனுமதிக்கப்பட உள்ளது.
எனினும், இவ்வாறு வரும் வாகனங்கள், முட்டைகள் மற்றும் கறிக்கோழிகள் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்பட்டன என்பதற்கும், அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் இல்லை என்பதற்கான கால்நடை பராமரிப்புத் துறையின் சான்றிதழையும் காண்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறிக்கோழி, முட்டைகளுக்கு கேரளா அரசு விதித்திருந்த தடை நீக்கப்பட்டதால் தமிழக கறிக்கோழி உற்பத்தியாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications