பஹ்ரைன் தொடர்குண்டுவெடிப்பு: தஞ்சாவூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பலி

எகிப்து, லிபியா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து பஹ்ரைனிலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவ்வப்போது குண்டு வெடிப்புகளும் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
பக்ரைனில் சன்னி பிரிவினர் கையில் தான் ஆட்சி உள்ளது. இந் நிலையில் பெரும்பான்மையினராக உள்ள ஷியா பிரிவினர் தங்களுக்கு ஆட்சியில் அதிக பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். அதிக ஜனநாயக உரிமைகள் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
ஆனால், செளதி அரேபியா மற்றும் அமெரிக்காவின் மறைமுக ஆதரவுடன் இந்த போராட்டங்களை அரசு ஒடுக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமா, அடில்யா, குதைபியா, ஹூரா ஆகிய இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 2 பேர் உயிரிழந்தனர். இந்திய தூதரகம் இருக்கும் குதைபியா பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஆசிய நாட்டவர் இருவர் பலியானதாக கூறப்பட்டது.
இதில் ஒருவர் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை திருநகரைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குதைபியா பகுதியில் 10 ஆண்டுகளாக கார் ஓட்டி வந்த அவர் நேற்று சாலையில் கிடந்த பையை தட்டிவிட்டிருக்கிறார். அதில் இருந்த குண்டுகள் வெடித்ததில் உயிரிழந்திருக்கிறார்.
குண்டுவெடிப்பில் பலியான திருநாவுக்கரசின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உறவினர்களின் கோரிக்கையாகும்.
குண்டு வெடிப்பில் பலியான திருநாவுக்கரசுக்கு கலைவாணி என்ற மனைவியும், ரத்தீப் (6) என்ற மகனும், கீர்த்தி (1) என்ற மகளும் உள்ளனர். திருநாவுக்கரசு கடந்த 2007-ம் ஆண்டு பக்ரைன் சென்று 2 ஆண்டுகள் கார் டிரைவராக பணி புரிந்தார். பின்னர் அய்யம்பேட்டைக்கு திரும்பிய அவர் கடந்த 2010ம் ஆண்டு மீண்டும் பக்ரைனுக்கு சென்றார்.
கடந்த 3 மாதத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த அவர் மீண்டும் மனமா நகருக்கு திரும்பினார்.












Click it and Unblock the Notifications