திருமாவளவன் மீது நில அபகரிப்பு வழக்கு: தலித் அமைப்புகள் கண்டனம்
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் எம்.பி. மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 30 பேர் மீது நில அபகரி்ப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம் அருகே உள்ளது காரணை. அங்கு ஆதி திராவிடர் பஞ்சமி நிலம் உள்ளது. அங்கு பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் உயிரிழந்த ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் அக்டோபர் 10ம் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தாண்டுக்கான கூட்டம் கடந்த மாதம் நடந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த தீபன் சக்ரவர்த்தி என்பவர் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் தனது மனுவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தன் நிலத்தை சேதப்படுத்தியதோடு, அதை ஆக்கிரமித்து மணிமண்டபம் கட்ட முயற்சி செய்தவாக குற்றம் சாட்டியிருந்தார்.
இது குறித்து விசாரித்த போலீசார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் எம்.பி, மாவட்டச் செயலாளர் விடுதலைச் செழியன், துணைச் செயலாளர் கிட்டு உள்ளிட்ட 30 பேர் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என பல்வேறு தலித் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications