கலப்புத் திருமணத்தால் தர்மபுரியில் பற்றி எரிந்த தலித் கிராமம்
தர்மபுரி: தருமபுரி அருகே இருவேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஒரு கிராமமே பற்றி எரிந்துள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் பதற்றம் உருவாகியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் செல்லம்பட்டியைச் சேர்ந்தவர் திவ்யா. இவர் வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர். இவர் நத்தம் காலணியைச் சேர்ந்த இளவரசனை காதலித்தார். இளவரசன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டார் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, திவ்யா வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதனால் திவ்யாவின் தந்தை நாகராஜ், இளவரசன் வீட்டுக்கு சென்று தன் மகளை தன்னுடன் அனுப்பிவிடுமாறு கேட்டுள்ளார். அதற்கு மறுத்துவிட்ட இளவரசன், திவ்யா இப்போது என் மனைவி இனி அவள் என்னுடன்தான் இருப்பாள் என்று உறுதியாக கூறிவிட்டார்.
இதனால் மனமுடைந்த நாகராஜ் உறவினர்கள் தன்னை கேலி செய்வார்கள் என்று அஞ்சி புதன்கிழமையன்று தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து செல்லம்பட்டியைச் சேர்ந்தவர்கள் நாகராஜின் உடலை வைத்துக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தீ வைத்து எரித்தனர்
அதே ஆத்திரத்தோடு, நத்தம் காலணி குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளையும், பொருட்களையும் அடித்து நொறுக்கி, குடிசைகளுக்கு தீ வைத்தனர். இதில் குடியிருப்புகள் மொத்தமும் எரிந்து சாம்பலானது. அந்த பகுதியில் இருந்த மரங்களை வெட்டி சாய்த்த நபர்கள், நத்தம் காலணியில் இருந்த இருசக்கர, நான்குசக்கர வாகனங்களையும் தீவைத்து எரித்தனர்.
ஊருக்குள் தீயணைப்புத் துறையோ போலீஸாரோ, வருவாய்த் துறையினரோ பத்திரிகையாளர்களோ செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீ வைத்தவர்கள் கைது
இதனிடையே குடிசைகளுக்கு தீவைத்த கலவரக்காரர்கள் 90 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்க மாவட்ட ஆட்சியர் லில்லி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications