தர்மபுரி அருகே தலித் வீடுகளுக்கு தீவைத்த 92 பேர் கைது
தர்மபுரி: தர்மபுரி அருகே கலப்புத்திருமண விவகாரத்தினால் 300க்கும் மேற்பட்ட தலித் குடியிருப்புகளுக்கு தீவைத்த 92 பேரை போலீசார் கைது செய்தனர். ஜாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் யாரும் ஈடுபடக்கூடாது என்று மாவட்ட எஸ்.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.
தர்மபுரியை அடுத்த செல்லன் கொட்டாயைச் சேர்ந்த இளம்பெண் திவ்யா, நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கே மகன் இளவரசன் என்பவரை கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இதனால் திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜின் உறவினர்கள் நூற்றுக் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் நத்தம் காலனியில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதனால் அஞ்சிய நத்தம் காலனி மக்கள் பக்கத்து ஊருக்குள் தப்பி ஓடிவிட்டனர். இதனை சாதகமாகப் பயன்படுத்திய கலவரக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி குடியிருப்புகளுக்கு தீ வைத்தனர். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் தீவைத்தனர். இதனைத் தொடர்ந்து அண்ணா நகர், கொண்டாம்பட்டி கிராமங்களிலும் புகுந்த கலவரக்காரர்கள் அங்கும் வீடுகளுக்குத் தீவைத்தனர். காவல்துறையினர் உள்ளே நுழைவதை தடுக்க மரங்களை வெட்டி தர்மபுரி-நாயக்கன் கொட்டாய் சாலைகளில் போட்டனர். இதனால் யாரும் உள்ளே செல்ல முடியவில்லை.
போலீசார் ஆய்வு
பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி. சுந்தரமூர்த்தி, சேலம் டி.ஐ.ஜி., சஞ்சய் குமார் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போலீசார் நத்தம் காலனிக்கு வந்தனர். பரமக்குடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தர்மபுரி மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க் புதன்கிழமை நள்ளிரவே நத்தம் காலனிக்கு திரும்பினர்.
92 பேர் கைது
இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலையில் ஐ.ஜி. சுந்தரமூர்த்தி, டி.ஐ.ஜி சஞ்சய் குமார், எஸ்.பி. அஸ்ரா கார்க் ஆகியோர் தலித் குடியிருப்புகளில் ஆய்வு நடத்தினர். கலவரம் குறித்து கருத்து தெரிவித்த மாவட்ட எஸ்.பி. அஸ்ராகார்க், தீவைப்பு சம்பவம் தொடர்பாக வெள்ளாளப்பட்டி ஊராட்சித் தலைவர் ராஜா உள்ளிட்ட 92 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளதாக கூறினார். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார். கலவரம் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக கூறிய அஸ்ரா, ஜாதிக் கலவரத்தை மேலும் தூண்டுவகையில் யாரும் செயல்படக்கூடாது என்று இருபிரிவினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தலைவர்கள் கையில்
தீவைப்பு சம்பவத்தினால் வீடுகளை இழந்து தவிப்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் வன்னியர் - தலித் இடையேயான ஜாதிப்பிரச்சினை பல ஆண்டுகளாகவே இருந்தாலும் கட்சி ரீதியாக இரு பிரிவினரும் மோதிக்கொள்வதுதான் அதிகமாக இருந்தது. இப்போது பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் ஒன்றாக அரசியலில் கூட்டணி அமைத்துள்ளனர். இருப்பினும் அடித்தட்டு மக்களிடையே உள்ள பிரச்சினைகளை தீர்க்க தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.












Click it and Unblock the Notifications