மாயாவதிக்கு தனது இல்லத்தில் மதிய விருந்தளித்த மன்மோகன் சிங்
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் வரும் 22ம் தேதி துவங்கவுள்ள நிலையில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார் பிரதமர் மன்மோகன் சிங்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு விருந்தளித்த பிரதமர் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு இன்று மதியம் விருந்தளித்துள்ளார்.
அந்த விருந்தின்போது வரும் கூட்டத்தொடரில் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு, விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களில் தங்களுக்கு ஆதரவாக இருக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல் நாத்தும் இன்று மதியம் நடந்த விருந்தில் கலந்து கொண்டார்.
விருந்திற்குப் பிறகு மாயாவதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எங்கள் கட்சி ஆளும் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வருகிறது. அதனால் இது போன்ற சந்திப்புகள் நடக்கும் என்றார்.
உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பிரமதரை சந்தித்து பேசினர். இந்நிலையில் திமுக, தேசியவாத காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தள தலைவர்களுக்கு பிரதமர் இன்று இரவு விருந்தளிக்கிறார்.