தரையிலிருந்து நகரத் தொடங்கியது பிரதீபா காவிரி கப்பல்.. ராத்திரிக்குள் கடலுக்குள் போய் விடும்
சென்னை: நிலம் புயலில் சிக்கி சென்னை பெசன்ட் நகர் கரையில் தரை தட்டி நின்ற பிரதீபா காவிரி சரக்குக் கப்பலை கடலுக்குள் இழுக்கும் முயற்சிகள் வெற்றி பெற ஆரம்பித்துள்ளன. கப்பல் மெதுவாக கடலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. இன்று இரவுக்குள் கப்பல் கடலுக்குள் போய் விடும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஐந்து நாட்களாக நடந்து வந்த முயற்சிப் போராட்டம் ஒரு வழியாக தற்போது வெற்றியைத் தொட்டுள்ளது.
சமீபத்தில் சென்னையை தாக்கிய நிலம் புயலால், பிரதீபா காவிரி சரக்கு கப்பல் கடற்கரையில் தரை தட்டி நின்றது. இந்த கப்பலை மீட்கும் பணி கடந்த 5ம் தேதி தொடங்கியது. மாளவியா, ரத்னா ஆகிய 2 இழுவை கப்பல்கள் சென்னை வந்தன.
கப்பலின் உரிமையாளர் பணம் கொடுக்க மறுத்ததால் ரத்னா இழுவை கப்பல் மீட்பு பணியில் ஈடுபடவில்லை. மாளவியா மட்டும் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தது. முதலில் நைலான் கயிறு கட்டி கப்பலை கடலுக்குள் இழுத்த போது, கயிறு அறுந்து விட்டது. இதையடுத்து, கப்பல் எடையை குறைக்க கப்பலில் இருந்து 5500 டன் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன்பின், இரும்பு கம்பிகள் மூலம் இழுவை கப்பலையும் பிரதீபா கப்பலையும் இணைத்தனர். பின்னர் கடலுக்குள் இழுத்தனர்.
நேற்று மாலை நடந்த இந்த முயற்சியின்போது தென்கிழக்கு திசை நோக்கி 100 டிகிரியில் கப்பல் நகர்ந்துள்ளது. மாளவியாவை தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் ரத்னா கப்பலும் பிரதீபா கப்பலை கடலுக்குள் இழுக்கும் பணியில் ஈடுபட்டது. இரண்டு இழுவை கப்பல்களும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதனால் இன்று பிரதீபா காவேரியை கடலுக்குள் இழுத்துவிடலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இன்று காலை கடற்கரைக்கு வந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், கப்பலை மீட்கும் பணியை நேரில் பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications