தலிபான்களுக்கு எதிராக போராடியதை சிறப்பிக்க நவ.10ஐ மலாலா நாளாக அறிவித்த ஐ.நா.
தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான மலாலா, உயிருக்கு போராடிய நிலையில் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். குழந்தைப் போராளி மலாலாவைப் பாராட்டி அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இந்நிலையில் அவர் சுடப்பட்ட 30வது நாளை மலாலா நாளாக கொண்டாடுமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனின் உலக கல்விக்கான சிறப்பு தூதரும், இங்கிலாந்து முன்னாள் பிரதமருமான கார்டன் பிரவுன் கேட்டுக் கொண்டிருந்தார்.
மேலும் மலாலா மற்றும் பள்ளி செல்ல உரிமை மறுக்கப்படும் 32 மில்லியன் பெண் குழந்தைகளை நினைவுகூறும் நாளாகவும் கடைபிடிக்கப்படும் என்று கார்டன் பிரவுன் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் நேற்று மலாலா நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி குழந்தைகளின் கல்வி உரிமைக்கான பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நாளை ஒட்டி ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் விடுத்த அறிக்கையில், உரிமைக்காகப் போராடிய மலாலாவை சுட்ட தலிபான்களை வேட்டையாடுவோம் என்று அறிவித்திருக்கிறார்.