சி.ஏ.ஜி வினோத் ராய்க்கு கிடுக்கிப்பிடி போட மத்திய அரசு திட்டம்!

Subscribe to Oneindia Tamil

Vinod Rai
டெல்லி: மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) பதவியை பல உறுப்பினர்கள் கொண்ட அமைப்பாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் மிக முக்கியமான பதவியான சிஏஜி பதவியில் உள்ள வினோத் ராய்.
மத்திய அரசின் வரவு, செலவுகளை ஆடிட் செய்து தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இந்தப் பதவிக்கு உண்டு.

ஆனால், இவரது அலுவலகத்தின் ஆடிட் கணக்குகள் மத்திய அரசுக்கு போகும் முன்பே மீடியாக்களுக்கு லீக் ஆகி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இதன்மூலம் வினோத் ராய் தொடர்ந்து மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந் நிலையில் சிஏஜி அமைப்பை பல உறுப்பினர் கொண்ட அமைப்பாக மாற்றுவது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. சிஏஜி அமைப்பை மூன்று உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக மாற்ற வேண்டும் என்று முன்னாள் சி.ஏ.ஜி. வி.கே.ஷுங்லு மத்திய அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையை அமலாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் இது சிஏஜி அமைப்பைப் பலவீனப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள முயற்சி என்று கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

முன்னதாக பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி, பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், சிஏஜி அமைப்பில் மாற்றங்களைச் செய்து பல உறுப்பினர் கொண்ட அமைப்பாக அதை மாற்றுவது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அனைத்து அரசமைப்புச்சட்ட அமைப்புகளும் தமக்குள்ள அதிகார வரம்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். அரசு எடுக்கும் முடிவுகள் குறித்து சி.ஏ.ஜி. விமர்சித்து வருவது மிகவும் துரதிருஷ்டவசமானது.

சமீப காலமாக தேவையற்ற கருத்துகளை அது தெரிவித்து வருகிறது. தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் மிகவும் பொறுமையிழந்து வருகிறார். இவ்வாறு கூறுவதால் நான் விமர்சனம் செய்வதாக அர்த்தமில்லை.

அரசின் பல்வேறு துறைகளும் செலவுகளை உரிய முறையில் மேற்கொள்கின்றனவா என்பதை ஆராய்வதே சிஏஜியின் வேலை. அந்த அமைப்பு தனது வரம்பைத் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது. இது என் தனிப்பட்ட கருத்துதான்.

2ஜி, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஆகிய விவகாரங்களில் சிஏஜி அளித்த அறிக்கைகளை ஆய்வு செய்து இவற்றில் முறைகேடுகள் நடந்ததா என்பதைப் பரிசீலிக்க வேண்டியது நாடாளுமன்றம்தான்.

சிஏஜியின் அறிக்கை மக்களவை சபாநாயகர் முன் சமர்ப்பிக்கப்படுகிறது. அவர் அதை பொதுக் கணக்குக் குழுவுக்கு (பி.ஏ.சி.) அனுப்பி வைப்பார். சிஏஜி தெரிவித்த கருத்துக்களை பி.ஏ.சி. ஆராய்ந்து, அறிக்கை தரும். சிஏஜி சொல்வதே இறுதியான கருத்து ஆகிவிடாது.

பொதுக் கணக்குக் குழு என்பது நாடாளுமன்றத்தின் அங்கமாகும். அது அறிக்கை அளித்த பின்னரே அரசால் நடவடிக்கை எடுக்க முடியும்.

சிஏஜி ஆயிரக்கணக்கான அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளது. அவர்கள் பல்வேறு மாநில முதல்வர்கள், பல்வேறு மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது குறை கூறியுள்ளனர். சிஏஜியின் அறிக்கைதான் இறுதியானது என்றால், எந்த முதல்வரும் பதவியில் தொடர முடியாது.

சிஏஜியின் அறிக்கைகள் லீக் செய்யப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார். இது தடுக்கப்பட வேண்டும் என்றார் நாராயணசாமி.

பாஜக எதிர்ப்பு:

சிஏஜியை மூன்று உறுப்பினர் கொண்ட அமைப்பாக மாற்றுவது மிக மோசமான யோசனை என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா கூறி்யுள்ளார்.

அவர் கூறுகையில், இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தேர்தல் ஆணையத்துக்கும், சிஏஜிக்கும் வித்தியாசம் உள்ளது. தலைமைக் கணக்குத் தணிக்கையாளரை ஒரு ஆணையமாகக் கருத முடியாது.

இப்போதைய சிஏஜி வினோத் ராய்க்கு வாய்ப்பூட்டு போடவும், அந்த அமைப்பைப் பலவீனமாக்கவுமே மத்திய அரசு இவ்வாறு திட்டமிடுகிறது என்றார்.
ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி கூறுகையில், சிஏஜி அளித்துள்ள அறிக்கைகள் காரணமாக, அந்த அமைப்பின் அதிகாரத்தை நீர்த்துப் போகச் செய்ய அரசு முயற்சிக்கிறது. வினோத் ராய் மிகவும் சுதந்திரமாகச் செயல்படுகிறார். அவரது சிறகுகளை ஒடிக்க அரசு முயல்கிறது. முன்பு தலைமைத் தேர்தல் ஆணையராக சேஷனின் அதிகாரத்தைக் குறைப்பதற்காக தேர்தல் ஆணையத்தைப் பல உறுப்பினர் அமைப்பாக அரசு மாற்றியது என்றார்.

இதே போல சிஏஜியை பல உறுப்பினர் அமைப்பாக மாற்ற அன்னா குழுவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிரண் பேடி, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சி.வி.சி.) விட்டல் ஆகியோரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

நாராயணசாமி பல்டி...

இந் நிலையில் சிஏஜியை பல உறுப்பினர் அமைப்பாக மாற்றுவதாக நான் கூறவில்லை. எனது கருத்து திரித்து வெளியிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் நாராயணசாமி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ரெக்கார்டிங் இருக்கு நாராயணசாமி.. பிடிஐ:

ஆனால், இதற்கு பிடிஐ செய்தி நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், அமைச்சர் நாராயணசாமி எங்கள் செய்தியாளருக்கு அளித்த பேட்டி டேப் ரிகார்டரில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அவர் கூறிய கருத்தையே நாங்கள் வெளியிட்டோம். அவரது கருத்து எந்த வகையிலும் திரிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

இந் நிலையில் சிஏஜியை பல உறுப்பினர் கொண்ட குழுவாக்க வேண்டும் என்று வி.கே.ஷுங்லு பரிந்துரை ஏதும் செய்யவில்லை என்றும், பிரதமருக்கு ஒரு நோட் மட்டுமே அனுப்பினார் என்றும் தகவல்கள் வருகின்றன.

அதுவும் கூட இது தொடர்பாக மத்திய அரசே கேட்டுத் தான் அவர் முன்பு நோட் அனுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சிஏஜியில் ஏற்கனவே 5 துணை தலைமைத் தணிக்கையாளர்கள் உள்ளதும், இதனால் அது ஏற்கனவே பல உறுப்பினர் கொண்ட அமைப்பு தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் சிஏஜியை பலவீனப்படுத்தவும் வினோத் ராயை மிரட்டி வைக்கவும் நாராயணசாமி மூலமாக மத்திய அரசு முயற்சிகளை ஆரம்பித்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+