கல்யாண வீட்டுக் குதிரை மாதிரி ராகுல் காந்தி, அசைய மாட்டேங்குறாரே... பாஜக கிண்டல்

இப்போதெல்லாம் அரசியல் செய்வது ரொம்ப ஈஸியாகி விட்டது. நீ அவரைப் போல இருக்கிறாய், அவர் உன்னை மாதிரி இருக்கிறார் என்று படு ஜாலியாக பேசப் பழகி வருகின்றனர் இந்திய அரசியல்வாதிகள்.
மோடியை காங்கிரஸ்காரர்கள் குரங்கு என்று பேசுகின்றனர். காங்கிரஸ்காரர்கள், அரவிந்த் கெஜ்ரிவாலை ராக்கி சாவந்த்துடன் இணைத்துப் பேசுகின்றனர். இப்படி மாறி மாறி பேசிப் பழகி வருகிறார்கள் இந்திய அரசியல்வாதிகள்.
இந்த நிலையில் தற்போது ராகுல் காந்தியை, கல்யாண வீட்டுக்குதிரை என்று பேசியுள்ளார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா. இதுகுறித்து அவர் கூறுகையில், மாப்பிள்ளை அழைப்பின்போது மாப்பிள்ளைய கூட்டி வருவதற்குப் பயன்படுத்தப்படும் குதிரை போல இருக்கிறார் ராகுல் காந்தி.
இந்தக் குதிரை எப்போதும் ஒரே இடத்தில்தான் நிற்கும், அசையவே அசையாது. அதேபோலத்தான் ராகுல் காந்தியும் எங்குமே நகருவதில்லை. அவரை நகர்த்த எத்தனையோ முயற்சிகளைச் செய்து பார்த்தாகி விட்டது. ஆனாலும் அவர் நகர மாட்டேன் என்கிறார். சிலர் அவரைத் தள்ளி விடக் கூட முயற்சிக்கின்றனர், ஆனாலும் முடியவில்லை.
தனக்கான நேரம் வரும் என்று அவர் காத்துக் கொண்டிருக்கிறார். அதுவரை மன்மோகன் சிங் என்ன செய்யப் போகிறாரோ பாவம் என்று கூறியுள்ளார் சின்ஹா.
சின்ஹாவின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திக்விஜய் சிங் பேசுகையில், முதலில் கத்காரி பாஜகவின் தலைவரா இல்லையா என்பது குறித்து சின்ஹா விளக்க வேண்டும். அவரை தலைவராக அவர் ஏற்கிறாரா இல்லையா என்பதைச் சொல்ல வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications