குஷ்பு- சுந்தர் சி மகள் கல்யாணம் இன்று! கோவாவில் 25 பேருடன் மட்டும் அவந்திகா–ஷ்ரவன் திருமணம்.. ஏன் தெரியுமா?
சென்னை: நடிகை குஷ்பு - இயக்குநர் சுந்தர் சி தம்பதியின் மூத்த மகள் அவந்திகா சுந்தரின் திருமணம் இன்று கோவாவில் நடைபெறுகிறதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பலருக்கும் நெருக்கமான குடும்பம் என்பதால், இந்த திருமணம் பிரம்மாண்டமாக நடக்கும் என பலர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக, மிகவும் நெருக்கமான குடும்பத்தினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தனிப்பட்ட விழாவாக இந்த திருமணம் நடைபெறுகிறது என்ற தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஷ்பூ சுந்தர் சி மகள்
அவந்திகா சுந்தர், சென்னையைச் சேர்ந்த மெர்சன்ட் நேவி அதிகாரி ஷ்ரவன் சீனிவாசனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலை இரு குடும்பங்களும் ஏற்றுக்கொண்டதையடுத்து, திருமண ஏற்பாடுகள் அமைதியாக நடந்துவந்தன. குஷ்பு மற்றும் சுந்தர் சி, மகள் மற்றும் வருங்கால மருமகனுடன் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் வழங்கியபோதுதான், அவந்திகாவின் திருமணச் செய்தி வெளியில் பெரிய அளவில் பேசப்பட்டது.

குஷ்பு மகள் திருமணம்
ஆனால் அதற்குப் பிறகும் திருமண தேதி, இடம், ஏற்பாடுகள் குறித்து எந்த பிரம்மாண்ட அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இப்போது தான் அவந்திகா-ஷ்ரவன் திருமணம் இன்று ஜூன் 25ஆம் தேதி கோவாவில் நடைபெறுகிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதிலும், இந்த திருமணத்தில் இரு வீட்டாரையும் சேர்த்து மொத்தம் 25 பேர் மட்டுமே பங்கேற்கிறார்கள் என்பது தான் தற்போது ரசிகர்களிடையே அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.
எளிமையான திருமணம்
இதற்குப் பின்னாலேயும் ஒரு சுவாரஸ்யமான காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. கூட்டம், கூட்டம் என பெரிய விழாக்களில் சிக்கிக்கொள்ள அவந்திகாவுக்கு விருப்பமில்லையாம். அதனால், "அமைதியாக, நெருங்கியவர்களுடன் மட்டும் கல்யாணம் நடக்கட்டும்" என்பதே அவரது விருப்பமாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தர் சி யின் ஆசை
முதலில் பதிவுத் திருமணம் மாதிரி சிம்பிளாக முடித்துவிடலாம் என்ற எண்ணமும் இருந்ததாம். ஆனால் "இது நம் வீட்டின் முதல் திருமணம்; எப்படியும் ஒரு நினைவாக நடத்த வேண்டும்" என்ற ஆசையில் குஷ்புவும் சுந்தர் சியும் திருமணத்தை கோவாவில் நடத்த முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் கோவாவில் நடத்துவது சரி, அழைப்பாளர்கள் பட்டியல் மட்டும் கடுமையாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையில் அவந்திகா உறுதியாக இருந்தாராம். அதனால்தான், குஷ்பு-சுந்தர் சி தம்பதியர் சினிமா மற்றும் அரசியல் உலகில் ஏராளமான நட்பு வட்டம் கொண்டிருந்தும், பெரிய அளவில் யாரையும் அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுவே இந்த திருமணத்தை இன்னும் அதிகமாக பேச வைக்கிறது.

குஷ்பூ மகள் கல்யாணத்தில் விஜய்?
இந்த திருமணத்தைச் சுற்றி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழும் பெரிய கேள்வி - "முதல்வர் விஜய் கோவா சென்று மணமக்களை வாழ்த்துவாரா?" என்பதுதான். காரணம், சில நாட்களுக்கு முன்பு குஷ்பு மற்றும் சுந்தர் சி இருவரும் நேரில் சென்று தமிழக முதல்வர் விஜய்க்கு அழைப்பிதழ் வழங்கியிருந்தனர். அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதனால், இன்று நடைபெறும் திருமணத்தில் விஜய் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, அரசியலுக்கு வந்த பிறகு முதல்வர் விஜய் பங்கேற்கும் முக்கியமான தனிப்பட்ட குடும்ப நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என்ற பேச்சும் ஓடிக்கொண்டிருக்கிறது. சட்டசபை கூட்டமும் இல்லாத நாள் என்பதால், "குஷ்பு அக்கா வீட்டு கல்யாணத்துக்கு விஜய் கண்டிப்பாக போவார்" என்று ரசிகர்கள் ஒரு தரப்பு நம்பிக்கையுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில், இது மிகவும் தனிப்பட்ட விழா என்பதால், அவர் வருகை கடைசி நிமிடத்தில் மட்டுமே தெரியும் என்றும் கூறப்படுகிறது. அவந்திகாவைப் பற்றியும் ரசிகர்கள் இப்போது அதிகமாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

படிப்பு முடித்த பிறகு தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்த அவர், "அம்மா-அப்பா பெயரை பயன்படுத்தாமல், நான் என் முயற்சியால் வர வேண்டும்" என்று முடிவு செய்ததாக ஏற்கனவே குஷ்பு கூறியிருந்தார். அதன்படி, தனியாக முயன்று நடிப்புலகில் அடியெடுத்து வைத்த அவந்திகா, தற்போது தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குள் நுழைகிறார்.
அவருடைய திருமணச் செய்தி வெளிவந்த நேரமே, அவர் புதிய படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்ற தகவலும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. நடிகை ஆகும் பயணம் தொடங்கிய கையோடு திருமணம் என்ற முடிவை எடுத்திருப்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது. ஆனால் அதே சமயம், "கேரியரும் வாழ்க்கையும் இரண்டையும் சமநிலைப்படுத்தி முன்னேறுவது நல்ல விஷயம்" என்று ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
மொத்தத்தில், குஷ்பு-சுந்தர் சி குடும்பத்தின் முதல் திருமணம், கோவாவில் 25 பேருடன் மட்டும் நடக்கும் செரிமனி, விஜய் வருவாரா என்ற எதிர்பார்ப்பு, திருமணத்துக்கு முன்பே பேசப்படும் அவந்திகாவின் கேரியர் முடிவுகள் - இந்த எல்லாவற்றாலும், இன்று நடைபெறும் அவந்திகா சுந்தரின் திருமணம் சினிமா ரசிகர்களிடையே பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இப்போது ரசிகர்கள் சொல்லும் ஒரே வரி இதுதான், "குஷ்பு மகள் கல்யாணம் என்றாலே கோலாகலம் இருக்கும் என நினைத்தோம்... ஆனா 25 பேரோட கோவாவில் செம கிளாசாக நடத்திட்டாங்க!" என்பதுதான்.













Click it and Unblock the Notifications