டெல்லியை தாக்க இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு சதி: பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்று உளவுத்துறை எச்சரித்துள்ளதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி மெட்ரோ மற்றும் பிரகதி மைதானத்தில் நடக்கும் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆகிய இடங்களை குழந்தைகள் தினமான இன்று தாக்க இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதலை நடத்த இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் ஏற்கனவே டெல்லிக்குள் புகுந்துவிட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.
டெல்லியில் தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய உளவுத்துறைக்கு சவுதி அரேபியாவில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து டெல்லி காவல் துறை வட்டாரங்கள் கூறுகையில்,
கடந்த 1ம் தேதி சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் டெல்லி போலீஸ் உயர் அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிலர் இந்தியாவின் தலைநகரை தாக்க திட்டமிடுகிறார்கள் என்று தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் அதிகாரிகளும், மத்திய உளவுத்துறையினரும் சேர்ந்து சவுதி தலைநகர் ரியாத் சென்று எச்சரிக்கை விடுத்த நபரை சந்தித்து பேசினர். அப்போது அவர் தாக்குதல் நடத்தும் நபர்கள் குறித்தும், அவர்களின் திட்டங்கள் குறித்தும் தகவல் கொடுத்தார்.
அவர் கூறிய அடையாளங்கள் கடந்த 2008ல் டெல்லி, ஹைதராபாத் மற்றும் ஜெய்ப்பூரில் தாக்குதல் நடத்திய ரியாஸ் பட்கலுடன் ஒத்துப் போகிறது என்றனர்.
உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முக்கிய இடங்களில் மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications