அரசு பஸ் மீது நடு ராத்திரியில் கல்வீச்சு.. கல் தலையில் பட்டு பயணி பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இருந்து சேலத்திற்கு வந்த அரசு பஸ் மீது நள்ளிரவில் சிலர் கல்வீசித் தாக்கினர். இதில் கல் ஒன்று பயணி ஒருவரின் தலையில் பட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலையில் இருந்து சேலத்துக்கு அரசு பஸ் புறப்பட்டு வந்தது. விடுமுறை முடிந்து பலர் ஊர் திரும்பியதால் பஸ்சில் அதிகளவில் கூட்டம் இருந்தது. நள்ளிரவு 12 மணியளவில் பஸ் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எஸ்.பட்டி என்ற இடம் அருகே வேகமாக வந்து கொண்டு இருந்தது.
அப்போது திடீரென சாலையின் குறுக்கே வந்து நின்று பஸ் மீது சரமாரியாக கல்வீசித் தாக்கினர். இதில் கல் பட்டு பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. அப்போது வேகமாக வந்த கல் உள்ளே அமர்ந்திருந்த சக்திவேல் என்ற பயணியின் தலையில் மோதியது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. கண்ணாடிச் சிதறல்களும் அவர் மீது சரமாரியாக விழுந்தது.
வலியால் துடித்த அவர் அலறித் துடித்தார். உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டது. சக்திவேலை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் பலத்த தலைக்காயம் காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சக்திவேல் திருவண்ணாமலை மாவட்டம் பச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர். திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்த அவர் பஸ்சில் சென்ற போது கல்வீச்சில் பலியாகிவிட்டார்.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதட்டம் நிலவியது. போலீஸாரும் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications