சிவகங்கை அதிமுக நிர்வாகி கொலை: இ.கம்யூ. எம்.எல்.ஏ மீது வழக்கு- தா.பாண்டியன் கண்டனம்
ஆனால் இந்த கொலைக்கும் தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என குணசேகரன் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் கதிரேசன் அவரது மகன் பிரசன்னா, டிரைவர் பூமிநாதன் ஆகிய 3 பேர் புதன்கிழமை இரவு மர்ம' கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
கொலை கும்பல் தாக்குதலில் படுகாயங்களுடன் உயிர் தப்பிய கதிரேசன் மகள் நிகிலா மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை வழக்குத் தொடர்பாக சிவகங்கை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. குணசேகரன் உள்பட 30 பேர் மீது சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்
இதற்கிடையே கதிரேசன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்படலாம் என்று தெரிகிறது. அரசு உத்தரவு வந்ததும் இந்த வழக்கு முறைப்படி இன்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.
குணசேகரன் மறுப்பு
இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டினை சிவகங்கை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. குணசேகரன் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசிய அவர், வெட்டிக் கொல்லப்பட்ட கதிரேசன் என்னிடம் எப்போதும் நண்பராக இருந்தவர். தேர்தல் நேரத்தில்கூட நான் அவரது வீட்டுக்கு சென்றுள்ளேன். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்று கூறினார்.
இந்த கொலை வழக்கில் போலீசார் என்னையும் சேர்த்துள்ளனர். இந்த கொலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இது தொடர்பான எந்த விசாரணைக்கும் நான் முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறேன் என்றார்.
தா. பாண்டியன் கண்டனம்
இதனிடையே கதிரேசன் கொலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ குணசேகரன் பெயரை தொடர்பு படுத்துவதற்கு தா.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. (போலீஸ் கேஸ் போட்டா இவர் ஊடகங்களை குறை சொல்வது ஏன்?) சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் தோழர் குணசேகரன் பெயரை, அவதூறு செய்யும் நோக்குடன், ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டைப் பரப்பி வருவதை மறுக்கிறோம்.
கதிரேசனைக் கொன்ற உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காவல்துறை மேற்கொள்ளும் விசாரணைக்கு கம்யூனிஸ்ட் கட்சி முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.