''ஆபரேஷன் எக்ஸ்'': கசாபை தூக்கில் போட அமலாக்கப்பட்ட ரகசிய திட்டம்!

26/11 மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் தீவரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவன் தூக்கிலிடப்பட்ட செய்தி கேட்டு இந்தியர்கள் மட்டுமல்ல உலக மக்களும் ஆச்சரியப்பட்டனர். அந்த அளவுக்கு அந்த தகவலை ரகசியமாக வைத்திருந்தனர்.
கசாபின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 5ம் தேதி நிராகரித்தார். இதையடுத்து சட்டம் ஒழுங்கு சிறப்பு ஐஜி தேவன் பாரதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அது ஆபரேஷன் எக்ஸ் என்ற பெயரில் கசாபின் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கைகளை செய்துள்ளது.
முக்கிய நிகழ்வுகள்:
அக்டோபர் 16, 2012: கசாபின் கருணை மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது.
நவம்பர் 5: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கசாபின் கருணை மனுவை நிராகரித்தார்.
நவம்பர் 7: கசாபின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு மகாராஷ்டிரா மாநில அரசுக்கு பரிந்துரைத்து அதற்குரிய ஆவணங்களில் உள்துறை அமைச்சர் கையெழுத்திட்டார்.
நவம்பர் 8: ஜனாதிபதியின் முடிவை உள்துறை அமைச்சகம் மகாராஷ்டிரா அரசுக்கு தெரிவித்தது.
நவம்பர் 8: கசாபை நவம்பர் 21ம் தேதி தூக்கிலிட மகாராஷ்டிரா அரசு முடிவு செய்தது.
நவம்பர் 19: கசாப் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்து புனேவில் உள்ள ஏர்வாடா சிறைக்கு மாற்றப்பட்டான்.
நவம்பர் 21, காலை 7.30 மணி அடிக்க சில நிமிடங்களுக்கு முன்பு: தனக்கு கடைசி ஆசை இல்லை என்று கசாப் தெரிவித்தான்.
7.30 மணி: ஏர்வாடா சிறையில் கசாப் தூக்கிலிடப்பட்டான்.
9.30 மணி: ஏர்வாடா சிறையிலேயே கசாப் உடல் புதைக்கப்பட்டது.
முன்னதாக கடந்த 19ம் தேதி அதிகாலை ஏர்வாடா சிறைக்கு கசாப் கொண்டு வரப்பட்டாலும் அவன் யார் என்று சிறை கண்காணிப்பாளர், துணை ஜெய்லர் மற்றும் டாக்டருக்கு மட்டுமே தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவனை முட்டை வடிவ அறையில் வைத்து பாதுக்காத்துள்ளனர். அவனை தூக்கிலிட்டவருக்கே சில நிமிடங்களுக்கு முன்பே அவர் தூக்கிலிடப்போகும் நபர் கசாப் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications