அதிமுகவினரின் தலையீட்டால் முடங்கிப் போய்விட்ட காவல்துறை: விஜயகாந்த்
சென்னை: தமிழக காவல்துறை கைகட்டிக் வேடிக்கை பார்ப்பதாலேயே நாள்தோறும் கொலைகளும், கொள்ளைகளும், வழிப்பறிகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. சட்டப்படி நடடிவக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, அதிமுகவினரின் அரசியல் தலையீடு காரணமாக முடங்கிப் போய் விட்டது என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வல்லம் ஊராட்சியை சார்ந்த தேமுதிக மாவட்டப் பிரதிநிதி கண்ணதாசன் நேற்று மாலை 6 மணியளவில் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவருடைய நண்பரும், தேமுதிக கிளைச் செயலாளருமான சந்துரு சில மாதங்கள் முன் படுகொலை செய்யப்பட்டார். இவை அனைத்திலும் சம்மந்தப்பட்டவர்கள் ஒரே சமூக விரோத கும்பலாக இருக்கும் என்ற சந்தேகம் வந்துள்ளது.
ஆரம்பத்திலேயே காவல்துறை இதில் சரியான நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் இந்த படுகொலையை நிகழாத வண்ணம் தடுத்திருக்க முடியும். ஏற்கனவே செங்கல்பட்டு நகர கழக செயலாளர் சுரேஷ், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த தொண்டரணி துணை செயலாளர் பாலாஜி ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை காவல்துறை கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பதாலேயே நாள்தோறும் கொலைகளும், கொள்ளைகளும், வழிப்பறிகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. சட்டப்படி நடடிவக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, ஆளும் கட்சியினரின் அரசியல் தலையீடு காரணமாக முடங்கிப் போய் விட்டது.
எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குப் போடுவதில் காட்டுகின்ற அக்கறையில் ஒரு சிறிதளவாவது இத்தகைய அக்கிரமங்களை தடுப்பதில் காவல்துறை காட்ட வேண்டும்.
இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை காவல்துறை உடனடியாக கண்டுபிடித்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
போன உயிர் திரும்ப வராது என்றாலும், உயிரை பறித்த கொலையாளிகளுக்கு தண்டனை கிடைக்கச் செய்வதன் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஓரளவிற்காவது ஆறுதல் கிடைக்கும். அதோடு மட்டுமல்லாமல் நீதியை நிலை நிறுத்தியதாகவும் அமையும். ஆகவே காவல்துறை இக்கொலை சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications