2ஜி: சிஏஜி சொன்ன நஷ்ட கணக்குக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: முரளி மனோகர் ஜோஷி
நிருபர்களிடம் அவர் கூறுகையில், இது தொடர்பாக சிஏஜி அலுவலக டைரக்டர் ஜெனரலாக இருந்த ஆர்.பி.சிங் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை இல்லாதவை. இதன்மூலம் சிஏஜியின் பெயரைக் கெடுக்க மத்திய அரசு முயல்கிறது.
2ஜி அறிக்கையை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முன் சமர்பித்ததே ஆர்.பி.சிங் தான். ஆனால், அப்போதே அவர் ஏன் இதை எதிர்க்கவில்லை.
சிஏஜி அறிக்கை குறித்து இப்போது காங்கிரஸார் பரப்பி வரும் கருத்துகளால் நான் பெரிதும் வருத்தமடைந்துள்ளேன். இதற்காக சோனியா காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும்.
2ஜி அறிக்கை தயாரிப்பில் நான் எந்த வகையிலாவது பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டதாக ஆர்.பி.சிங் நிரூபித்தால், நான் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுப் பொறுப்பில் இருந்து வெளியேறவும் தயார்.
2ஜி அறிக்கை விவகாரத்தில் நான் எந்த விதத்திலும் தலையிடவே இல்லை. என் மீது கூறப்படும் குற்றச்சாடுகள் பொய்யானவை. இந்த விவகாரத்தை அப்படியே திசை திருப்ப நடத்தப்படும் நாடகம் இது என்றார் முரளி மனோகர் ஜோஷி.
பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், முரளி மனோகர் ஜோஷி மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை இல்லாதவை. ஆர்.பி.சிங் ஏன் இதை ஒரு வருடத்துக்கு முன்பே கூறவில்லை. சிங் இப்போது காங்கிரசின் கைப்பாவையாகிவிட்டார். இது ஒரு பெரிய சதி. சிஏஜி அமைப்பையே மத்திய அரசு வலுவிழக்கச் செய்யப் பார்க்கிறது என்றார்.