திருவனந்தபுரம் அருகே தூத்துக்குடி காரில் கடத்திய 750 கிலோ வெடிமருந்து பறிமுதல்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே தமிழக பதிவு எண் கொண்ட காரில் கடத்தப்பட்ட 750 கிலோ வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கட்டாக்கடை பகுதியில் ஒரு கார் வேகமாக வந்தது. அந்த பகுதியில் நெய்யாற்றின்கரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுருந்தனர். போலீசாரை பார்த்ததும் டிரைவர் காரை திருப்பி தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக எஞ்சின் கோளாறு ஏற்பட்டதால் அந்த கார் அங்கேயே நி்ன்றுவிட்டது. இதற்குள் உஷாரான போலீசார் அந்த காரை நோக்கி ஓடினர். போலீசாரை பார்த்ததும் காரில் இருந்த 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். கார் டிரைவர் சுனில் குமார் மட்டும் போலீஸ் பிடியில் சிக்கினார்.
போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது அதில் 15 பைகளில் 750 கிலோ எடை கொண்ட அம்மோனியம் நைட்ரேட் இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து சுனில் குமாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நெய்யாற்றின்கரையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அந்த வெடிமருந்துகள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. மேலும் இந்த கும்பல் காரில் பலமுறை வெடிமருந்துகள் மற்றும் எரிசாராயம் கடத்திய தகவலும் வெளி வந்தது. வெடிமருந்து கடத்திய காரில் டிஎன் 69 ஏஏ 6980 என்ற தமிழக பதிவு எண் உள்ளது. அந்த நம்பர் பிளேட் மீது கேரளாவில் பதிவானது போல போலியான நம்பர் பிளேட் வைத்து மறைத்திருந்தனர். டிரைவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications