மதுரை-திண்டுக்கல் ரயில் மோதி உடல் துண்டாகி 2 சிறுமிகள் பலி
மதுரை: வாடிப்பட்டி அருகே ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற 2 சிறுமிகள் பயணிகள் ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு உடல் துண்டாகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பரவை, கம்பன் தெருவைச் சேர்ந்த கருப்பையாவின் மகள் சினேகா(10). அதே தெருவைச் சேர்ந்த கார்மேகம்(எ) கண்ணன் என்பவரின் மகள் அனுசியா(7). சினேகாவும், அனுசியாவும் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 5ம் வகுப்பும், 2ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் சிறுமிகள் இருவரும் அருகில் உள்ள தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மதுரை-திண்டுக்கல் பயணிகள் ரயில் மோதி சிறுமிகள் தூக்கி வீசப்பட்டனர். உடல் துண்டாகி அவர்கள் இருவரும் பரிதாபமாக பலியாகினர்.
இது குறித்து தகவல் அறிந்த மதுரை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications